கடந்த ஆண்டின் நோய்ப் பரவல் முறியடிப்புக்கான காலகட்டத்தின்போது வீட்டில் இருந்த வெங்கடசாமி ஜெயசீலனின் எண்ணங்கள், ஊழியர் தங்கும் விடுதிகளில் அடைப்பட்டிருந்த ஊழியர்களைப் பற்றியே இருந்தன. ஊழியர்களின் மனநலம் குறித்த இவரது அக்கறைதான் இறுதியில் இவருக்கு யோகாவில் கின்னஸ் சாதனைக்கு வழிவகுத்தது.
‘விருட்சாசனம்’ என்ற ஆசனத்தில் திரு ஜெயசீலன், 39, கின்னஸ் சாதனைக்கான நான்கு சாட்சிகளின் முன்னிலையில் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதியன்று சாதனையை நிகழ்த்தினார்.
இந்த ஆசனத்தில் இவர் 1 மணி நேரம் 12 நிமிடங்கள் 59.84 வினாடிகள் நின்று சாதனை படைத் திருப்பதாக அந்நிகழ்வில் பதிவாகிஉள்ளது.
இதற்காக இவர் நவம்பர் மாதம் விரைவு விண்ணப்ப முறையின்கீழ் (Fast track) இந்தச் சாதனையைப் படைத்துக் காட்ட விண்ணப்பித்தார்.
நான்கு சுயேச்சை சாட்சிகளில் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் என்று அந்தச் சாட்சிகளில் ஒருவரான யோகா பயிற்றுவிப்பாளர் ரீத்தா ஜெய்ன், 42, தெரிவித்தார்.
“ஒரு வழக்கறிஞர், இரண்டு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடன் நான் இவரது சாதனைக்கு சாட்சியாக இருந்தேன்,” என்று அவர் கூறினார்.
வியாசா யோகா நிலையத்தில் இந்தச் சாதனையை ஆர்வத்துடன் நிகழ்த்தத் தொடங்கிய திரு ஜெயசீலன் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியபோது அங்கிருந்த அனைவருமே மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக திருவாட்டி ஜெய்ன் கூறினார்.
“திரு ஜெயசீலன் ஆசனத்தை தடுமாற்றமின்றி செய்தார். அவர் இறுதியில் ஆசனத்தைக் கைவிட்டு தரையில் விழும்வரை நானும் மற்றொருவரும் நேரத்தைக் கண்காணித்துப் பதிவு செய்தோம்,” என்று சாதனைகளைக் கண்ட நான்கு சாட்சிகளில் ஒருவரான திரு சுமித் சட்டர்ஜி, 40, தெரிவித்தார்.
எங்களது கையொப்பங்களைக் கொண்ட படிவங்களும் சாதனை நிகழ்ந்ததைக் காட்டும் காணொளியும் கின்னஸ் அமைப்பிடம் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது,” என்று குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியரான திரு சட்டர்ஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆமத்தூரைச் சேர்ந்த திரு ஜெயசீலன், சிங்கப்பூரில் 13 ஆண்டுகளாக கட்டுமானப் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
கிருமிப் பரவல் நேரத்தில் மன உளைச்சலால் ஊழியர் தங்கு விடுதிகளில் சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்ட திரு ஜெயசீலன், ஒரு சாதனையைப் படைத்து மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க விரும்பியதாகத் தெரிவித்தார்.
யோகாசன ஆசிரியரான தமது அண்ணன் வி. ஜெயக்குமாரிடம் கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கற்று வருகிறார். இதற்கு முன்னதாக யோகாசனக் கலையின் மீது அதிக ஆர்வமில்லை என்று கூறிய ஜெயசீலனின், இருபது ஆண்டுகளாக இதில் அனுபவமுள்ள தமது அண்ணனால் இதற்குள் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
ஜெயசீலனுக்கு கிட்டத்தட்ட இருபது ஆசனங்கள் தெரியும். இச்சாதனையைப் படைப்பதற்கு முன்னர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மட்டும் விருட்சாசனத்தைப் பயிற்சி செய்து படிப்படியாக அதற்கான நேரத்தைக் கூட்டிக்கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
உடலும் மனதும் மூச்சும் ஒருங்கிணைக்கும் யோகாவைப் பழகுவது தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் சரியாகச் செய்யும்போது வலி ஏற்படாது என்கிறார் திரு ஜெயசீலன். இதனால் தமது உடற்பயிற்சிகளுக்கான தேவை யோகாவிலேயே பூர்த்தியாவதாக அவர் கூறினார்.
திரு ஜெயசீலனின் சாதனை குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அவரது அண்ணன் தெரிவித்தார்.
தமது கணவரின் சாதனையால் யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து மேலும் பலர் அதனை தங்கள் வாழ்க்கை முறையுடன் இணைத்துக்கொள்ள விரும்புவதாக ஜெயசீலனின் மனைவி திருமதி கீதாஞ்சலி தமிழகத்திலிருந்து தொலைபேசி வழியாகத் தெரிவித் தார்.
“யோகா செய்த பின்னர் எனக்கு இருந்த சோம்பல் வெகுவாகக் குறைந்துள்ளது. இப்போது நான் சீரான மனநிலையுடனும் நல்ல ஒழுக்கத்துடனும் இருக்கிறேன். முப்பது வயதில் இருந்ததைக் காட்டிலும் நான் இப்போது இன்னும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன்,” என்றார் ஏழு வயது மகளுக்குத் தந்தையான திரு ஜெயசீலன்.