வரலாற்று சிறப்புவாய்ந்த பென்கூலன் பள்ளிவாசலில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில் சமூகத்திடமிருந்து நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் கூத்தாநல்லூர் சங்கம் (சிங்கப்பூர்), அதன் உறுப்பினர்களிடம் வசூலித்து பள்ளிவாசல் புதுப்பிப்புப் பணிகளுக்காக $50,000 நன்கொடைவழங்கியுள்ளது.
அந்த நன்கொடைக்கான காசோலையைச் சென்ற மாதம் 24ஆம் தேதி அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் கூத்தாநல்லூர் சங்கத்தின் தலைவர் சடையன் அப்துல் அலீம், செயலாளர் முஹம்மது ஷாஹுல் ஹமீது இருவரும் பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.
பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தலைவர் ஹாஜி எம்.ஒய்.முஹம்மது ரஃபீக், துணைத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.அப்துல் ஜலீல், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற தெற்குப் பள்ளிவாசல் குழுமத்தின் பொது நிர்வாகி ஹாஜி பைமான் சுபங்காட் ஆகியோரிடம் காசோலை வழங்கப்பட்டது.
“கொவிட்-19 நோய்ப் பரவல் ஏற்படுத்திய இக்கட்டான சூழலில் பலரும் பொருளாதார ரீதியில் நெருக்கடியைச் சந்தித்திருந்தாலும் பல உறுப்பினர்கள் இந்த நிதி திரட்டுக்கு மனமுவந்து ஆதரவளித்தனர்,” என்று பெருமிதம் கொண்டார் கூத்தாநல்லூர் சங்கத்தின் செயலாளர் முஹம்மது ஷாஹுல் ஹமீது.
“இன்னும் தொடர்ந்து உறுப்பினர்கள் பள்ளிவாசல் புதுப்பிப்புக்கு நன்கொடை வழங்க ஆர்வம் கொண்டிருப்பதால் சங்கம் தொடர்ச்சியாக நிதியைத் திரட்டி பென்கூலன் பள்ளிவாசலின் பணிகளுக்கு உதவ நோக்கம் கொண்டு உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
தமிழகத்தின் கூத்தாநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட கிட்டத்தட்ட 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் அந்தச் சங்கம், 1996ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் குடும்ப மன்றம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. 2004ல் கூத்தாநல்லூர் சங்கம் என்று அது பெயர் மாற்றம் கண்டது.
சிங்கப்பூரர்களாகவும் மற்ற சிலர் நிரந்தரவாசிகளாகவும் சிங்கப்பூரில் வசித்து வருபவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் சங்கம் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது.
குடும்ப தினம், ரத்த நன்கொடை, சுகாதார முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகளைத் தங்கள் உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்வதுடன் இதர சிங்கப்பூரர்களையும் அரவணைத்து நிகழ்ச்சிகளைச் சங்கம் நடத்தி வருகிறது.
பள்ளிவாசல் புதுப்பிப்புக்காக நன்கொடை வழங்கிய கூத்தாநல்லூர் சங்கத்திற்கு நன்றி நல்கினார் ஹாஜி ரஃபீக்.
“$4 மில்லியன் செலவில் பென்கூலன் பள்ளிவாசலில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பணிகளுக்கு மேலும் $1.5 மில்லியன் தேவைப்படுகிறது.
“பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கும் எங்களுக்கு இந்தத் தருணத்தில் கூத்தாநல்லூர் சங்கம் வழங்கியுள்ள நன்கொடை பேருதவியாக இருக்கும். அதற்கு கூத்தாநல்லூர் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்களுக்கு பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினர் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
“இதேபோல மேலும் பல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களது ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூறினார் ஹாஜி ரஃபீக்.
தொழுகைக்கான கூடுதல் இடங்கள், இதர வசதிகளுடன் இவ்வாண்டு இறுதிக்குள் புதுப்பிப்புப் பணிகள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பென்கூலன் பள்ளிவாசல் புதுப்பிப்புப் பணிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் https://masjidbencoolen.org/donate/ எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.