அஷ்வினி செல்வராஜ்
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்குறள் விழா, இந்த வருடம் இணையம் வழி முப்பத்தைந்தாவது ஆண்டாக நடந்தேறியது.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய திரு மு. ஹரிகிருஷ்ணன், திருக்குறள் விழா மூலம் தொடர்ச்சியாக திருக்குறள் போட்டிகளை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன், சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, நாட்டின் தற்கால அரசியல் கொள்கைகளையும் நடப்புகளையும் திருக்குறளுடன் இணைத்து சிறப்புரையாற்றினார்.
கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உலகப் பொதுமறையின் சிறப்புகளைச் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கப்பூரின் அரசியல் தலைவர்கள் நடைமுறைப்படுத்திய அரசியல் கொள்கைகள் குறித்தும் அவை எவ்வாறு வள்ளுவர் இயற்றிய குறள்களுடன் பொருந்தி போகின்றன என்பது குறித்தும் திரு தினகரன் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, நான்கு பள்ளி மாணவர்களின் கூட்டு இயக்கத்தில் உருவான 'குறளே தீர்வு' என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள தமிழ்க் குடும்பங்களில் ஏற்படும் அன்றாட பிரச்சினைகளுக்கு திருக்குறள் வழி வெவ்வேறு கதாபாத்திரங்கள் எவ்வாறு தீர்வு காண்கிறார்கள் எனும் கருப்பொருளைக் கொண்டு குறும்படம் அமைந்திருந்தது.
ஆண்டுதோறும் விழாவில் வழங்கப்படும் திருவள்ளுவர் விருது, தேசிய கல்விக் கழகத்தின் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராகவும் அத்துறையின் தமிழ்மொழி பண்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராகவும் உள்ள முனைவர் சீதாலட்சுமிக்கு இவ்வாண்டு வழங்கப்பட்டது.
கல்வியியல் மற்றும் படைப்பிலக்கியம் சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்ட முனைவர் சீதாலட்சுமி, தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் அவற்றைச் சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
விழாவின் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதோடு விழாவின் சிறப்பு பேச்சாளரான முனைவர் மன்னை இராஜகோபாலன், 'முப்பாலில் மூன்றாம் பால்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி விழாவை நிறைவு செய்தார்.