- ஆர்த்தி சிவராஜன்
வளர்தமிழ் இயக்கம் ஆதரவில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் கியட்ஹோங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சி ஏப்ரல் 25, ஞாயிறு மாலை 6.30 மணியளவில் ஃபேஸ்புக், யூடியூப் தளங்கள் வழி ஒளியேற்றப்பட்டது. இப்பட்டிமன்ற நிகழ்ச்சி இதுவரை 50,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
‘வாழ்க்கையில் வெற்றிபெற உந்துசக்தி - பெற்ற பாராட்டுகளா, பட்ட அவமானங்களா?’ என்பதே பட்டிமன்றத்தின் தலைப்பு. பட்டிமன்ற நாயகராக பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா, நிகழ்ச்சியை வெகு சிறப்பாகக் கொண்டு சென்றார்.
வாழ்க்கை வெற்றிக்கு உந்துசக்தியாக இருப்பது பாராட்டுகளே என்று கூறிய திரு ராஜா, “ஒரு வார்த்தை பாராட்டைக் கேட்போருக்கு மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அவரது செயலிலும் வெற்றியிலும் பாராட்டுவோரின் ஒரு பங்கு சேர்கிறது. பாராட்டுவதால் பொறாமை என்பது காணாமல் போகிறது. பாராட்டப்படும் மனிதன் ஒரு வேளை தொலைவில் இருந்தாலும் அருகில் உள்ளவராக மாறுகிறார். எதிரியாக இருந்தாலும் நட்பை நோக்கி நகர்கிறார்,” எனக் கூறினார்.
அவமானங்களே உந்துசக்தியாக இருந்து வெற்றிபெற உதவும் எனக் கூறிய எதிரணியின் திருமதி பாரதிபாஸ்கர், “தனி நபர்களாக இருந்தாலும் நிறுவனங்களாக இருந்தாலும் நாடுகளாக இருந்தாலும் பாராட்டுகள் மகிழ்ச்சி தருபவை. ஆனால், அந்த பாராட்டுகளைத் தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஏற்றுக்கொண்டாலும், அந்த பாராட்டில் அப்படியே உட்கார்ந்துவிட்டால், அடுத்த ஓர் அடியைக் கூட எடுத்துவைக்க முடியாதபடி தலைகனத்திற்குப் போய்விடுகிறது. ஆனால், அவமானங்களோ நிற்கவிடாமல் நம்மைத் துரத்துகின்றன. அவைதான் உந்துசக்தி,” என்றார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வாழ்க்கையில் வெற்றிபெற உந்துசக்தியாக இருப்பவை அவமானங்களே என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கியட் ஹோங் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் திரு அருமைச்சந்திரன் PBM வரவேற்புரை வழங்க, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் முன்னாள் தலைவரும் மூத்த மதியுரைஞருமான திரு யூசுப் ரஜித், திரு சாலமன் பாப்பையாவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.