சிங்கப்பூரில் நடந்த பொதுத் தேர்தலின்போது முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் இயூவிற்கு பூமாலை கட்டித் தரும் வாய்ப்பு திரு ர.ஜெயசெல்வத்திற்குக் கிடைத்தது. 2002ஆம் ஆண்டில் ஒரு திறப்புவிழாவிற்காக முன்னாள் பிரதமர் கோ சோக் டோங்கிற்கான மாலையையும் இவர்தான் கட்டினார். தற்போதைய பிரதமர் திரு லீ சியன் லூங்கையும் சேர்த்து மூன்று பிரதமர்களுக்கு மாலை கட்டிய பெருமை, 56 வயதான திரு ஜெயசெல்வத்தைச் சேரும்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டில் பிறந்தவர் திரு ஜெயசெல்வம். கைத்தொழில்கள் செழித்த காலகட்டம் அது. தாம் இளைஞராக இருந்தபோது, ‘ஜோதி ஸ்டோர்’ பூக்கடையின் செயல்பாடுகளை நிர்வகித்த திரு மு.பசுபதி இவருக்கு அறிமுகமானார்.
வார இறுதிநாள்களில் ஓய்வு நேரத்தில் கடையில் வந்து உதவுமாறு தம்மிடம் கேட்டுக்கொண்டதால், அந்தக் கடையில் பூமாலை கட்டும் உத்திகளைக் கற்றுக்கொண்டார் திரு ஜெயசெல்வம். 1980களில் முந்தைய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயின்று இயந்திர வல்லுநராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
இவருக்கு 1994ஆம் ஆண்டில் திருமணமானது. வாழ்க்கையில் மேலும் முன்னேற்றம் காண, தம் மனைவி ப.அனுஷியா பெயரில் டன்லப் சாலையில் பூக்கடை ஒன்றை ஆரம்பித்தார்.
தாம் தொடங்கியபோது லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பத்துக்கும் குறைவான பூக்கடைகளே செயல்பட்டு வந்ததாக திரு ஜெயசெல்வம் குறிப்பிட்டார். நாளாவட்டத்தில் பல பூக்கடைகள் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தொடங்கப்பட்டு, போட்டித்தன்மை அதிகரித்துவிட்டதாக இவர் கூறினார்.
ஒருபக்கம் கடை வாடகையும் உயர, 2000ஆம் ஆண்டில் அப்பர் டிக்சன் சாலைக்குக் கடை இடம் மாறியது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக வீராசாமி சாலையில் அனுஷியா பூக்கடை இயங்கி வருகிறது.
1990களில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் இல்லாத நிலையில், வாடிக்கையாளர்களின் பரிந்துரையை நம்பித்தான் பூக்கடைகளுக்கு வியாபாரம் நடந்து வந்தது.
பிரதமர்களைத் தவிர மற்றும் சில பிரபலங்களின் தோள்மீதும் இவர் கட்டிய மாலை அணிவிக்கப்பட்டது.
“ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜோசஃப் ஸ்கூலிங், சாங்கி விமான நிலையத்தை அடைந்தபோது அவரை வரவேற்பதற்காக நான் தயாரித்த ஆர்க்கிட் மாலை அவருக்குச் சூட்டப்பட்டது. அது மறக்க முடியாத ஒரு தருணம். அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்ததால், பூமாலையில் தங்க நாடாக்களையும் சேர்த்துக்கொண்டேன்,” என்று ஐந்து ஆண்டுகளுக்குமுன் நடந்ததை நினைவுகூர்ந்தார் திரு ஜெயசெல்வம்.
அண்மையில் தோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் ஒன்றுக்கு இரண்டாகத் தங்கப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூவுக்கும் அதேபோல் இவர்தான் மாலை கட்டினார்.
இக்காலத்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, 2018ஆம் ஆண்டில் மின்வர்த்தக இணையத்தளம் ஒன்றை இவர் தம் மூத்த மகன் 26 வயது ஜெயகிரிஷனின் உதவியுடன் தொடங்கினார்.
கடந்த சில ஆண்டுகளாகத் திருமண மாலைகளைத் தயாரிப்பதில் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்டகிராம்’ போன்ற சமூக வலைத்தளங்களில் கடையின் சேவைகளை விளம்பரப்படுத்த இளைய மகன் ஜெயகண்ணன் பங்காற்றி வருகிறார்.
வாடிக்கையாளர்களிடம் முதலில் மின்வர்த்தகம் தொடர்பில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட திரு ஜெயசெல்வம், கொவிட்-19 காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் மின்வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட, தம் வியாபாரம் பன்மடங்கு பெருகியது என்றார். ஆனால் பூமாலை கட்டுவதற்குத் தாம் ஒருவர் மட்டுமே இருப்பதால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வாடிக்கையாளர்களின் தேவையை மட்டுமே தம்மால் பூர்த்தி செய்ய முடிகின்றது என்றார்.
“இத்துறையில் பூமாலை கட்டும் திறன் கொண்ட ஊழியர்களை வேலைக்கு எடுப்பது பெரும் சவால்.
“இந்திய சமூகத்தினர் இந்த கைத்தொழிலைக் கற்று, பூக்கடையைத் தொடங்கி, தாங்களும் வியாபாரத்தில் வெற்றி காண்பதே என் ஆசையாகும். கலையைக் கற்றுத்தர நான் தயார்,” என்றார் திரு ஜெயசெல்வம்.
மூன்று வாரங்களுக்கு நடைபெறும் ‘மை கம்யூனிட்டி ஃபெஸ்டிவல்’ எனும் மரபுடைமை விழாவில் பொதுமக்களுக்கு இவர் பூமாலை கட்டும் உத்தியைக் கற்றுத்தர இருக்கிறார்.
மேல்விவரம் அறிய பொதுமக்கள் https://mycommunityfestival.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.