எஸ். வெங்கடேஷ்வரன்
உள்ளூர் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர் 75 வயது திரு
ரெ. சோமசுந்தரம்.
நாடகங்களுக்கு எழுத்து, இயக்கம், நடிப்பு என்று பல வழிகளில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் கலைத்துறைக்குப் இவர் பங்களித்துள்ளார்.
ஆனால் திரு சோமசுந்தரத்தின் படைப்புகளை ரசித்த பலருக்கு, அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திரு சோமசுந்தரம் தமது 11வது வயதில் தமிழ்நாட்டில் உள்ள கும்மங்குடி எனும் ஊரிலிருந்து குடும்பத்தைப் பிரிந்து தனியாக சிங்கப்பூருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைத் தேடி வந்தார்.
படிப்பு உட்பட செய்தித்தாள் விநியோகம், மளிகைக் கடை வியாபாரம் என்று இதர பல வேலை
களைச் செய்துகொண்டே நாடகங்களிலும் நடித்தார்.
1979ஆம் ஆண்டில் வானொலிப் படைப்பாளராகச் சேர்ந்ததை அடுத்து, சிங்கப்பூர் கலைத்துறையில் முத்திரை பதிக்கத் தொடங்கினார்.
இதுபோன்ற வாழ்க்கைச் சம்பவங்களை துல்லியமாக சித்திரித்தது அண்மையில் அகம் மேடைநாடகக் குழு ஏற்பாட்டில் எஸ்பிளனேட் கலையரங்கில் நடைபெற்ற ‘ரெ சோமா’ மேடை நாடகம்.
“சுயசரிதை எழுதுவது என்பதே எளிதான செயல் அல்ல. அதையே நாடகமாக்குவது அதைவிட சவால்மிக்கது. என் வாழ்க்கைப் பயணத்தை மேடை நாடகமாக படைக்க, அகம் குழு என்னை அணுகியபோது நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகுமோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
“ஆனால் பத்தே நாட்களில் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்பனையானது என்னை வியக்க வைத்தது,” என்றார் திரு சோமசுந்தரம்.
செப்டம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை ‘ரெ சோமா’ நாடகம் ஐந்து முறை மேடையேறியது.
மொத்தம் 250 பார்வையாளர்கள் நாடகத்தைக் கண்டு களித்தனர்.
“என் மகன் கார்த்திகேயன், இயக்குநர் கணேஷுடன் இணைந்து என் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி எழுதி, என்னைப் போல நடித்ததைக் கண்கூடாகப் பார்த்தது என் பாக்கியம். இறைவன் எனக்குத் தந்த அருள். நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்தனர்,” என்று கூறினார் திரு சோமசுந்தரம்.
தெருக்கூத்து படைப்புகள், மகாபாரத இதிகாசத்தில் வரும் துரியோதனன் கதாபாத்திரத்தை நடிப்பது போன்றவை திரு சோமசுந்தரத்திற்குப் பிடிக்கும்.
திரு சோமசுந்தரத்தின் வெவ்வேறு வாழ்க்கைக் கட்டங்களில் வரும் முக்கிய அம்சங்கள் கவனமாக நாடகத்தில் உள்ளடக்கப்பட்டன என்றார் திரு கணேஷ்.
“பலரும் சுயசரிதைகளை நூல்
களாக எழுதுகிறார்கள். அதை ஏன் மேடை நாடகமாக படைக்கக்
கூடாது என்று யோசித்தேன். சிங்கப்பூர் கலைஞர்களில் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்க்கைப் பயணங்களை மேடைக்கு கொண்டு வரவேண்டும் என்பது அகம்
நாடகக் குழுவின் இலக்கு.
“அடுத்த 20 ஆண்டுகளில் 10, 15 கலைஞர்களின் சுயசரிதைகளை மேடை நாடகமாகப் படைக்கலாம்,” என்றார் திரு கணேஷ்.
29 வயது திரு ஜே.எஸ்.சசிகுமார் நாடகத்திற்குத் தேவையான ஆய்வு, எழுத்து, சுவரொட்டி உருவாக்கம் ஆகியவற்றில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஈடுபட்டார்.
“முதல் சுவரொட்டியைத் தயாரிக்க கணேஷ், கார்த்திகேயன் ஆகிய இருவருடன் ஸூம் தளம் வாயிலாக நான்கு மணி நேரம் கலந்துரையாடினேன்.
“சுவரொட்டி எத்தகைய உணர்வு களை வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். ஒரு வழக்கமான நாடகமாக ‘ரெ சோமா’ இருக்கக்கூடாது என்று ஆரம்பத்திலேயே நாங்கள் முடிவுஎடுத்தோம்,” என்றார் சசி.
நாடகத்தைப் பார்த்தவர்கள் அதை வெகுவாகப் பாராட்டினர்.
“ஒரு கலைஞரின் சுயசரிதையைத் தமிழ் மேடை நாடகமாக இதற்குமுன் பார்த்த நினைவு இல்லை. அதுமட்டுமல்லாது, மகனே தந்தையின் சுயசரிதையை எழுதி, அவர் பாத்திரத்தை ஏற்று நடித்ததிலும் இந்த நாடகம் தனிச் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்ல வேண்டும். நாடகத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களும் மிக அருமையாக நடித்தனர்.
“புத்தாக்க முறையில் இந்த நாடகத்தை இயக்கிய சுப்ரமணியம் கணேஷ், கார்த்திகேயன் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவரும் நிகழ்ச்சியின் பார்வையாளருமான திரு அழகியபாண்டியன், 57.