ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மொழி மற்றும் இலக்கியப் பிரிவான இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் பேசும் கலை வளர்ப்போம் மன்றம், மாணவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்குபெறும் நிகழ்ச்சியை மாதந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறது.
மேடையில் பேச ஆர்வம் இருந்தும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமிழில் பேசவும் பாடவும் ஊக்குவிக்கவும் தமிழ்மொழி என்றென்றும் நம் நாவிலும் இல்லங்களிலும் ஒலித்துக்கொண்டே இருக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மெய்நிகர் தளம் மூலம் பேசும் கலை வளர்ப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது. 24வது முறையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அமைப்பின் தலைவர் மு. ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தி னராக சமூக அடித்தளத் தலைவர் திரு நிஜாமுதீன் பிபிஎம் கலந்துகொண்டார்.
பேச்சாளர்கள் எவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசனை வழங்கினார். மேலும் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளைப் பற்றியும் அவர் பேசினார். இளம்பிறை இலக்கிய வட்டத்தின் பணிகளை அவர் பாராட்டினார். சிறப்புப் பேச்சாளராக தான்சானியா நாட்டில் 'தமிழ் ஆப்பிரிக்கா' அமைப்பை நிறுவி சமூக சேவையும் தமிழ்ப்பணியும் ஆற்றி வரும் திருமதி நாச்சியார் கலந்து கொண்டார். 'சிறகு இருந்தால் போதும், சின்னதுதான் வானம்' என்ற தலைப்பில் அவர் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, வரவேற்புரை நிகழ்த்திய ஒருங்கிணைப்பாளரும் துணைத் தலைவருமான திரு முஹம்மது பிலால், தமிழ்முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கிய நல்லாசிரியர் விருதைப் பெற்ற ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார், பிறகு மாதந்தோறும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பேசும் கலை வளர்ப்போம் நிகழ்வில் பேச்சு, பாடல், கவிதை எனத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு சான்றிதழ்களோடு சிறிய ஊக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என்பதைச் சொல்லி, மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
மாணவர்கள் சேது மாதவன், ஸ்வேதா மணிகண்டன், யாழினி கமலக்கண்ணன், முஹம்மது ஷேக் ஷஹீம் ஆகியோருடன் பெரியவர்களான திருமதி வெண்ணிலா அசோகன், திரு முரளி வைத்தியநாதன், திரு அப்துல் சுபஹான், திரு கார்த்திக் சிதம்பரம், திருமதி மஹ்ஜபீன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளையொட்டிப் பேசினர்.
கவிஞர் வேலம்புதுக்குடி பரீஜ் எழுதிய பாடலை நாகூர் தெளலத் மியான் இசையமைத்து திரு பாவா ஜலாலுத்தீன் பாடிய காணொளி காண்பிக்கப்பட்டது. செயலாளர் கவிஞர் அஷ்ரப் நன்றியுரை ஆற்றினார்.
மெய்நிகர் தளம் வழியாக 40க்கும் மேற்பட்டோர் இணைந்த நிலையில், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் மூலமாகப் பலர் நிகழ்ச்சியைக் கண்டனர்.