பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் மக்களிடையே பெரிதளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏனென்றால் பல நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் முன்பதிவில் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.
கிராஞ்சி பண்ணை சுற்றுலா, சிறாருக்கு கதை சொல்லும் நேரம், கைவினைப் பொருள்கள் செய்யும் பயிலரங்குகள், பொங்கல் கண்காட்சி போன்ற பல்வகை நேரடி நிகழ்ச்சிகளை நிலையம் ஏற்பாடு செய்து உள்ளது.
அவற்றில் தஞ்சாவூர் ஓவியப் பயிலரங்கு, களிமண் சிலைப் பயிலரங்கு, கிராஞ்சி பண்ணை சுற்றுலா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.
மேலும் சில நேரடி நிகழ்ச்சிகளில் குறைவான இடங்களே எஞ்சியுள்ளன.
கொவிட்-19 சூழலால் கடந்த ஆண்டு பெரும்பான்மை நிகழ்ச்சிகள் மெய்நிகர் நடந்தேறின.
நேரடி, மெய்நிகர் என மொத்தம் 28 நிகழ்ச்சிகள் இவ்வாண்டு இடம்பெறுகின்றன.
கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்திய மரபுடைமை நிலையத்தில் ஜனவரி 8 முதல் 16 வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள் இணையத்தில் முன்பதிவு செய்துகொண்டு கலந்து கொள்ளலாம்.
இந்திய மரபுடைமை நிலையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை தெரிவித்தது.
இவ்வாண்டு கொண்டாட்டங்களின் கருப்பொருள், கைவினைப்பொருட்கள் என்பதால் அது தொடர்பான கூடுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மேலும், 10-14 வயதான சிறார்களுக்காக பொங்கலோ பொங்கல் தமிழ் சிறப்பு பொங்கல் இணையப் பக்கம் பொங்கல் (ஜனவரி 14) செயல்படத் தொடங்கும்.
அத்துடன் பொதுமக்கள் இலவசமாக பொங்கல் கண்காட்சியை ஜனவரி 8 - 16ஆம் தேதி வரை காலை 10 மணியில் இருந்து காணலாம்.
மேல் விவரங்களுக்கு இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.