இவ்வாண்டு பொங்கல் திருவிழா நாள்களில் கோலம் இட நினைக்கும் இளையர்கள், இந்திய மரபுடைமை நிலையம் இவ்வாண்டு அமைத்திருக்கும் சிறப்பு குறுந்தளத்துக்குச் சென்று அதற்கான மாதிரி வடிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கான பொங்கல் நல்வாழ்த்துகளையும் பதிவிறக்கம் செய்யலாம்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் வழங்கும் நேரடி நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, மெய்நிகர் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பகுதியாக 'பொங்கலோ பொங்கல்' என்ற சிறப்புக் குறுந்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் இளையர்களைக் கவரும் பல நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இளையர்களை ஈர்க்கும் புதிர்கள், நடவடிக்கை அட்டைகள், பல்லூடக விசைகள் போன்றவை அவர்களுக்கு மாறுபட்ட, இணையவழி பொங்கல் அனுபவத்தை வழங்கும்.
அத்துடன் பொங்கல்பானை பொங்குவதை வழக்கமாக எட்ட இருந்தே பார்க்கும் இளையர்கள், பொங்கலுக்கு என்னென்ன இடுபொருள்கள் சுவை கூட்டுகின்றன என்பதை குறுந்தளத்தில் உள்ள வரைகலையில் பார்க்கலாம்.
பொங்கல் விழாவின் பின்னணி, கிராமிய நடனங்கள் முதலிய வழக்கங்களையும் அங்கங்களையும் விளக்கும் காணொளிகளும் குறுந்தளத்தில் உண்டு.
கண்ணைக்கவரும் வண்ணப் பொலிவுடன் அமைந்துள்ள இருவழித் தொடர்புடைய இத்தளம், தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவை பண்பாட்டுப் புரிதலுடன் நோக்கி பயனடைய இத்தளம் பல்லின மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
'பொங்கலோ பொங்கல்' குறுந்தளத்தை அணுக: https://www.indianheritage.gov.sg/pongalo-pongal
- கூடுதல் செய்தி: விஷ்ணு வர்தினி ஆனந்தன்