இர்ஷாத் முஹம்மது
லிட்டில் இந்தியா பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக கோலமிடும் நிகழ்ச்சி வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
முப்பது ஊழியர்கள், ஐவர் கொண்ட ஆறு குழுக்களாக 'சிங்காரங்கோலி' எனும் வண்ணத் தூரிகை கோலத்தைப் போட்டனர்.
லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிளைவ் ஸ்திரீட், 'பொலி' கூடாரத்தில் ஊழியர்கள் கோலமிடப் பழகினர்.
நிகழ்ச்சியை சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன் தொடங்கி வைத்தார்.
வாரயிறுதி வேலை விடுப்பு நாளில் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் கோலம் போட்டதில் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
"இதுதான் நான் போடும் முதல் கோலம். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்களுடன் இணைந்து கோலம் போடும் இந்த வாய்ப்பு கிடைத்தில் மகிழ்ச்சி," என்றார் நிலவனப்புத் துறையில் மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றும் திரு சந்திரன்.
பல வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு கையில் கோலமிட்டுக் கொண்டு மறுகையில் திறன்பேசியின் மூலம் காணொளி வாட்ஸ்அப் தொடர்பு மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினருடன் உரையாடினர்.
"இங்கே பாரு. நான் என்னா செய்றேனு பாரு. கோலம் போடுறேன்," என்று குதூகலத்துடன் குடும்பத்தினரிடம் பேசினார் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் திரு சீனிவாசன். அவரது நிறுவனத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கலந்துகொண்ட குழுக்களில் ஒன்று, இல்லப் பணிப்பெண்களை உள்ளடக்கியது. நண்பர்களைச் சந்தித்து உணவருந்துவது மட்டுமல்லாமல் நடவடிக்கையில் ஈடுபடுவதுமூலம் நல்ல முறையில் செலவிட்டது மனதிற்கு இதமாக இருப்பதாக குழுவினர் தெரிவித்தனர்.
பங்கேற்பாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார் லிஷாவின் தலைவர் திரு சி. சங்கரநாதன்.
"இவ்வளவு திறமைகளை வைத்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்பாக இருக்கிறது," என்றார் அவர்.
ரங்கோலி கோலத்தில் பல சாதனைகளைப் படைத்த திருமதி விஜயலட்சுமி மோகன் நடவடிக்கையை வழிநடத்தி பங்கேற்பாளர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.
பெரும் திரையில் வண்ண மைகளைக் கொண்டு தூரிகை வைத்து கோலமிடும் கலையை திருமதி விஜயலட்சுமி அண்மை ஆண்டுகளாகப் பிரபலப்படுத்தி வருகிறார். அதற்கு 'சிங்காரங்கோலி' என்றும் அவர் பெயரிட்டு அடையாளப்படுத்தி வருகிறார்.
உழவருக்கும் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் நன்றிசொல்லும் திருநாளான தைப்பொங்கல்
நாடு, சமய பேதங்களின்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் தமிழர் திருநாளாக சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளை முன்னிட்டு சமூக அமைப்புகளும் நிறுவனங்களும் தை மாதம் முழுவதும் நாடெங்கும் நேரிலும் மெய்நிகரிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. சென்ற வாரம் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் சில இன்று இடம்பெறுகின்றன.