சமூக சேவையில் ஈடுபட்டுவரும் ஞானானந்தம் ‘மிஷன்’ சமூக உதவிகளுடன் பொங்கல் அன்று சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது.
பிடோக் நார்த்திலுள்ள ‘காமன் கிரவுண்ட் சிவிக் சென்டரில்’ நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக அன்-நஹ்தா பள்ளிவாசலின் சமய நல்லிணக்க மையத்தின் இயக்குநர் திருமதி உஸ்தாஸா லியானா ரோஸ்லி அஸ்மாரா, ராணுவ மருத்துவ கல்விக் கழகத்தின் தளபதி கர்னல் டாக்டர் ஷாலினி அருளானந்தம் ஆகியோருடன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கௌரவ கொள்கை ஆலோசகரான டாக்டர் தர்ஷனா ஸ்ரீதரும் இணையம் வழி பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
உடற்குறையுள்ளோருக்கு சக்கர நாற்காலி, வசதி குறைந்த குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகைப் பொருள் பற்றுச்சீட்டு, மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி ஆகிய உதவிகளை பொங்கல் அன்று ஞானானந்தம் ‘மிஷன்’ வழங்கியது.
‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’, ‘சோகேர்’ அமைப்புகளின் ஆதரவில் தங்குவிடுதியில் வசிக்கும் 18 பேருக்கும்; ‘புரோஜெக்ட் ஹில்ஸ்’ அமைப்புடன் இணைந்து ஓரறை வாடகை வீடுகளில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கும் தலா $100 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ நாராயண ‘மிஷன்’ இல்லவாசிகள் மூவருக்குச் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவ, சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் $4,000 நிதி உதவித் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
"எல்லா படைப்புகளும் கடவுளுக்கு சொந்தமானது, அனைத்தும் அவருடைய குழந்தைகளே. எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல. கடவுளுடைய பார்வையில் யாரும் பெரிதாகவோ குறைவாகவோ இல்லை. கடவுளின் மொழி அன்பு. அவரது மதம் இரக்கம். அவரது சமூகம் அனைத்து உயிரினங்களுக்கும் தன்னலமற்ற சேவையாகும். இதுவே எங்கள் அமைப்பான ஞானானந்தம் மிஷனின் முக்கிய கொள்கை," என்றார் ஞானானந்தம் மிஷன் அனைத்துலக அமைப்பின் இயக்குநரும் ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் தலைவரும் பீடாதிபதியுமான பூஜ்யஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள்.
“இனம், மொழி, சமய வேற்றுமைகளைப் பாராமல் உதவி தேவைப்படுவோருக்கு தொடர்ந்து உதவி புரிவது எங்கள் இலக்கு,” என்று தெரிவித்தார் ஞானானந்தம் ‘மிஷன்’ அமைப்பின் இயக்குநர் குழுவில் சேவையாற்றும் டாக்டர் கஜன்.