முதல் அறுவடையை சூரியனுக்கு அர்ப்பணித்து நன்றி கூறும் உழவர் திருநாள் சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை சிறிய அளவில் கொண்டாடப்பட்டது.
மிகப்பெரிய விவசாயப் பொருளியலைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் விவசாயத்தைச் சார்ந்த பெரிய சமூகத்தைக் கொண்ட நாடாகவும் திகழும் இலங்கையில் பொங்கல் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
"நன்றி கூறுவது என்பது இலங்கை சமூகத்தின் முக்கியப் பண்பாடு. தைப்பொங்கல் அன்று முதல் அறுவடையைச் சூரியனுக்கு அர்ப்பணிக்கும் பாரம்பரியம், தொன்று தொட்டு இலங்கை சமூகம் கொண்டாடிவரும் பண்புநெறிகளை பிரதிபலிக்கிறது," என்று தெரிவித்தார் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் திருவாட்டி சஷிகலா பிரேமவர்தினி.
"இலங்கையின் தேசிய கலாசாரத்தின் பிரதான அங்கமாக தைப்பொங்கல் உருவெடுத்துள்ளது," என்று அவர் விவரித்தார்.
நொவீனா, கோல்ட்ஹில் பிளாசாவில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அலுவலக ஊழியர்களும் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில் ஆலயம், சிங்கப்பூர் சிலோன் தமிழர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கிருமிப் பரவல் சூழல் காரணமாக இந்த ஆண்டு சிறிய அளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக தூதரகம் கூறியது.
- இர்ஷாத் முஹம்மது