தமிழாசிரியர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் நல்லாசிரியர் விருதுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதான நல்லாசிரியர் விருதை தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இவ்விருது தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக்கல்லூரி ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் இரு விருதுகள் வழங்கப்படும்.
இப்பிரிவுகளுக்கு மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் முன்மொழிவுகளை அனுப்பிவைக்கலாம்.
மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய கல்விக் கழகத்தின் சிறப்பு பயிற்சி ஆசிரியர் விருது ஆகியவையும் வழங்கப்படும்.
தேர்வு பெறுவோருக்கு நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். விழா இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரையில் 209 ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.
முன்மொழியும் படிவங்களை பிப்ரவரி 7ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனுப்ப தொடங்கலாம்.
முன்மொழிவுகளைப் பதிவு செய்ய, ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி இறுதிநாளாகும்.
பரிந்துரை செய்யும் படிவங்களை அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது https://www.tllpc.sg, https://www.tamilmurasu.com.sg ஆகிய இணையப் பக்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் உங்கள் பரிந்துரைகளை https://go.gov.sg/mitt-tl-2022-tl, https://go.gov.sg/mitt-2022-form-el ஆகிய முகவரிகளைப் பயன்படுத்தி இணையம் வழியும் சமர்ப்பிக்கலாம்.
நல்லாசிரியர் விருதைப் பற்றிய மேல் விவரம் அறிய மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: MOE_TLLPC_Secretariat@moe.gov.sg
நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி பெறுவோர்:
-
தமிழ்மொழியின்பால் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற்றுத் தருபவராக விளங்க வேண்டும்.
-
புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவராகத் திகழ வேண்டும்.
-
மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
நல்லாசிரியர் விருதுக்கு முன்மொழியும் வழிமுறை பற்றிய குறிப்புகள்:
-
விருதுக்குத் தகுதியானவர் எனத் தாங்கள் கருதும் ஆசிரியரைத் தெரிவுசெய்து, உங்கள் தெரிவுக்கான காரணங்களை விளக்கி எழுதி, முன்மொழியும் படிவத்தை நிறைவு செய்து அனுப்பவும். நீங்கள் பரிந்துரைக்கும் ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு விருதும் ரொக்கமும் வழங்கப்படும்.
-
மாணவர்கள், பெற்றோர்கள், சக ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளித் தலைவர்கள் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைப் பரிந்துரைத்து முன்மொழியும் படிவங்களை பிப்ரவரி 7ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கலாம்.
-
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த விருதுக்கு முன்மொழியப்படலாம்.