சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் சமயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் பல இன சமயத்தவர்கள் புனித ரமலான் மாத நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) மாலை நடந்த நோன்பு துறப்பு விருந்தில் பல சமய பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், பங்காளிகள் ஆகியோர் ஒன்றுகூடினர்.
தொழுகை நடத்தப்பட்ட பின்னர் அனைவரும் நோன்பு துறந்தனர்.
கிட்டத்தட்ட 80 பேர் வட்ட மேசைகளில் அமர்ந்து உணவுப் பெட்டிகளில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் கோ சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின்போது ஸ்ரீ நாராயண மிஷன் தனது மேம்படுத்தப்பட்ட இணையத்தளத்தை வெளியிட்டது.
பல இன சமயத்தவர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு சகோதரத்துவத்தை வளர்ப்பதாக சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவர் மு. அ. மசூது குறிப்பிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடக்கும் இந்த ஒன்றுகூடலால் சமூகத் தொண்டர்கள் தங்களது உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடிந்ததாக ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலத்தின் செயற்குழு நிர்வாகி ஆர் மகேந்திரன் கூறினார்.