பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு வீட்டிலேயே உட்கார்ந்திருந்த 44 வயது திருமதி ஷீலா பத்துமலைக்கு, வேலைக்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆவல் பூர்த்தியடைந்தது. வேலைக்குப் போனார்.
பகுதிநேரக் காசாளராக விரைவு உணவு நிலையத்திலும் பேரங்காடியிலும் வேலை பார்த்தபோதுதான் வேலையையும் வீட்டுப் பொறுப்பு
களையும் சமாளிப்பதில் சிரமம் இருப்பதை அவர் உணர்ந்தார்.
தொடர்ந்து வீட்டிலுள்ள வேலைகளைக் கவனிக்க இயலாமல் முறையற்ற நேரங்களில் வேலை செய்யவேண்டிய கட்டாயம், வீட்டிலிருந்து வேலையிடத்துக்குச் சென்று வரும் களைப்பு, போக்கு
வரத்துச் செலவு ஆகிய காரணங்களால் தொடர்ந்து காசாளராக திருமதி ஷீலாவால் பணிபுரிய முடியவில்லை.
அப்போது 'கிராப்' நிறுவனத்திலுள்ள வாய்ப்புகள் பற்றி இவருக்குத் தெரியவந்தது.
அங்கு இவர் உணவு விநியோக வேலையில் சேர்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தற்போது இவர் குடும்பத்தைக் கட்டிக்காப்பதோடு தனது மனநலத்தையும் நல்லமுறையில் பேணி வருகிறார்.
பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பும்போது 'கிராப்' உணவு விநியோக ஓட்டுநர் வேலையைத் தொடங்கி, பள்ளி முடிந்து அவர்கள் வீடுதிரும்பும்போது தமது வேலையை முடித்துக்கொள்கிறார் திருமதி ஷீலா.
"வீட்டிலேயே இருந்தபோது வெறும் வீட்டுப் பொறுப்புகளை மட்டும் கவனித்துக்கொள்ள சலிப்பாக இருந்தது. இதனால், அடிக்கடி எனது மகன்களிடம் கோபப்
படுவேன். அவர்களும் நான் வீட்டிலேயே இருந்ததால் பொறுப்பில்லாமல் இருந்தார்கள்.
"ஆனால், இப்போது நான் வேலைக்குச் சென்று வருவதால் என் மகன்கள் பொறுப்புடன் வீட்டுப்பாடங்களை செய்து எனக்கு உதவி செய்ய முயல்கிறார்கள். இதனால் மன
வுளைச்சல் குறைகிறது," என்று நிம்மதியுடன் கூறுகிறார் இவர்.
உணவு விநியோக ஓட்டுநராக தமது அனுபவங்களையும் இவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
"வெயிலில் அலைந்து, திரிந்து உணவை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும்போது தங்களது நன்றியைத் தெரிவிக்க சிலர் தண்ணீரையும் குளிர்பானங்களையும் வழங்குவார்கள். மழையில் நனைந்து வரும்போது வேறு சிலர் பணம் கொடுப்பார்கள்.
"ஆரம்ப காலத்தில் ஒரு நாள் இடம் தெரியாமல் பூன் லே வட்டாரத்தில் திக்குத் தெரியாமல் நின்றபோது எனது கணவரின் உதவியோடு வெற்றிகரமாக விநியோகத்தை செய்து முடித்தேன். அதன் பிறகு, எனக்கென ஒரு நண்பர் குழுவை உருவாக்கிக்கொண்டேன். திருமதி ஜெயா, திருமதி தனம் என என்னைப்போல் 'கிராப்' உணவு விநியோகிப்பாளர்களாகப் பணி
புரியும் தாய்மார்களின் நட்பு கிடைத்தது.
"ஒருமுறை நான் குளிர்
பானத்தை வாடிக்கையாளர் ஒருவரிடம் எடுத்துச் சென்றபோது கை
தவறி அதனைக் கொட்டிவிட்டேன். ஆனால், எனது தவற்றை எடுத்துகூறிப் புரியவைத்ததால் அவர் அதிகமாகக் கோபப்படவில்லை," என்று தமது வேலை அனுபவங்களை அடுக்கினார் திருமதி ஷீலா.
தனது சில நண்பர்கள் இதுவரை 'ஏன் இந்த வேலையைச் செய்கிறாய், வேறு வேலையே இல்லையா?' என்று தமது வேலையைப் பார்த்து கேள்வி கேட்டபோது 'இந்த வேலைக்கு என்ன' என்று மறுகேள்வி கேட்கவேண்டிய நிலைஇவருக்குப் பலமுறை ஏற்பட்டுள்ளது.
தம்மைப்போல 'கிராப்' உணவு விநியோகிப்பாளராகப் பணிபுரியும் நண்பர் ஒருவரின் பிள்ளைகள் அவர் செய்யும் வேலையை தரக் குறைவாகப் பார்ப்பதாகக் கூறினார். ஆனால், தமது பிள்ளைகளும் கணவரும் அப்படி இல்லை என்று மகிழ்கிறார் திருமதி ஷீலா.
"அனைவரின் ஆதரவினால்தான் என்னால் வீட்டுப் பொறுப்பு களைக் கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்ல முடிகிறது.
"அதுவும் ஒரு தாயாக எனது கடமைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயமும் இருக்கிறது," என்று சொல்லி முடித்த திருமதி ஷீலா, வேலை-குடும்பம் சமநிலையைப் பராமரிக்க விரும்பும் பெண்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறார்.