சிங்கப்பூர் கவிதை விழா இந்த ஆண்டு, நேற்று முன்தினத்தில் இருந்து ஆகஸ்ட் 10ஆம் வரை நடைபெறுகின்றது. தமிழ்க் கவிதைகளை அலசி ஆராயும் மூன்று நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5, 6, 7ஆம் தேதிகளில் இடம்பெறுகின்றன.
என்.பி.எஸ் அனைத்துலகப் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு தமிழ்க் கவிதை, கதை பயிலரங்கு, ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் மூன்றரை மணி வரை நடைபெறும். கவிஞர்கள் சாம்ராஜ், இசை இருவரும் இணைந்து நடத்தும் இப்பயிலரங்கில் மாணவர்கள் கவிதை, கதை குறித்த நுணுக்கங்களைக் கற்கலாம்.
சிங்கப்பூர்க் கவிதைத் தொகுப்புகளை ஆராய்ந்து விமர்சிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ஏழு மாணவர்கள். கவிதைகளைக் குறித்த தங்கள் பார்வைகளை, புகழ்பெற்ற கவிஞர்களின் துணையோடு இவர்கள் தமிழில் படைக்கவிருக்கின்றனர்.
'நமக்குள் கவிதை' என்ற இளையர் கவிதைக் கருத்தரங்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி 'தி ஆர்ட்ஸ் ஹவுசின்' 'ப்ளே டென்' தலத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. கவிஞர்கள் பெருந்தேவி ஸ்ரீநிவாசன், கீதா சுகுமாரன், இசை, சாம்ராஜ் ஆகியோர் இரண்டு மாத காலமாக மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
"கவிஞரின் கண்ணோட்டத்தில் நின்று கவிதைகளை ஆராய இத்திட்டம் வாய்ப்பளித்தது. ஒவ்வொரு கவிதையும் தனித்துவமானது; இனி இலக்கியங்களை இத்தகைய கண்ணோட்டத்தில் ஆராயவேண்டும் என்ற எண்ணத்தை இக்கருத்தரங்கு விதைக்கும்," என்றார் ஈசூன் இன்னோவா தொடக்கக்கல்லூரி மாணவரும் கருத்தரங்கப் படைப்பாளருமான லக்ஷ்மணன் சாய் பாலாஜி.
கவிதைகளில் மறைந்துள்ள தகவல்களைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகக் கூறினார் மற்றொரு படைப்பாளரான விக்டோரியா தொடக்கக்கல்லூரி மாணவி ஏழுமலை ரித்திகா. கருத்தரங்கில் கலந்துகொள்வோர் தங்களைப் போலவே கவிதையின்பால் ஈர்க்கப்படுவர் என்றார் இவர்.
நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் பங்கேற்கக்கூடிய கலந்துரையாடலும் இடம்பெறும். மாணவர்களுக்கு வழிகாட்டிய கவிஞர்கள் நால்வரும் இதில் நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் உரையாடுவர்.
"உள்ளூர் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்ல இளையர்கள் விமர்சனத்தில் ஈடுபடவேண்டும். இதன்வழி இலக்கியத்தில் இருவழித் தொடர்பையும் பன்முகத்தன்மையையும் ஏற்படுத்தலாம். இன்னும் எழுதப்படா விவகாரங்களும் படைக்கப்படா பாணிகளும் உள்ளன என்ற சிந்தனையைத் தூண்டுவது நிகழ்ச்சியின் நோக்கம்," என்றார் 'நமக்குள் கவிதை' திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு வர்தினி.
தேசியக் கலை மன்றம், ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிடெட், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறும் கருத்தரங்கிற்குப் பதிவு செய்யவேண்டிய இறுதி நாள், ஆகஸ்ட் 5ஆம் தேதி.
தமிழில் நவீன கவிதைகளின் மொழி, போக்குகள், பேசுபொருள், நுணுக்கங்கள், அமைப்பு ஆகியவை பற்றிக் கலந்துரையாட கவிதை வாசிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை ஆறரை மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை தேசிய நூலக வாரியத்தில் நடைபெறும்.