மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூரில் வளர்ந்த 38 தனிப்பட்ட இந்தியர்களின் வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடைய சொந்தக் குரலில் தொகுத்துள்ளது 'அவேர்' என்னும் மகளிருக்கான செயல், ஆய்வுச் சங்கம்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட 'வாட் வி இன்ஹெரிட் - குரோவிங் அப் இந்தியன்' என்ற இந்த நூல் இந்திய பெண்மணிகள், ஆண்மகன்கள் ஆகியோர் சிங்கப்பூரில் ஓர் இந்தியராக வளரும்போது நேரிடும் சவால்களையும் சுவாரசியமான அனுபவங்களையும் வர்ணிக்கிறது.
ஒரு சில நேரங்களில் இந்தியப் பாரம்பரியத்தின் மகத்துவத்தை புரிந்துகொள்ளாமல் இந்தியர்
களைக் கேலி செய்த நிகழ்வுகள் பல ஏற்பட்டுள்ளன.
ஆனால், அதை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் எழுத்தாளர்கள் தங்களுக்கு ஓர் இந்தியராக இருப்பது என்னவென்பதை அவர்களுடைய கட்டுரைகளின் வாயிலாகப் பிரதிபலித்துள்ளனர்.
உதாரணத்திற்கு, எழுத்தாளரான சரண்யா, தமது தந்தையின் சொல் கேட்டு சீனமொழியைக் கற்றுக்கொண்டதால் அவரால் தமிழ்மொழி அவ்வளவு சரளமாகப் பேச முடியாமல் போனது.
தமது பாட்டியுடன் தமிழில் உரையாட சிரமமாக இருப்பதாக இவர் கூறினார். ஒருவேளை தமிழ்
மொழியில் சரளமாகப் பேச முடிந்தால் அவர்களது பந்தம் இன்னும் நெருக்கமானதாக இருந்திருக்குமோ எனச் சில சமயங்களில் சரண்யா எண்ணியதும் உண்டு.
சீன உணவு வாங்கும்போது அவருடைய சீனமொழித் திறனைக் கண்டு பலர் வியந்த தருணங்களும் உண்டு. பார்ப்பதற்கு இந்தியர், ஆனால் பேசுவது சீனமொழி என்று நினைக்கும்போது அவருடைய அடையாளம் என்னவென்று குழப்பமடைந்தார் சரண்யா.
இந்தியர்களிடையே ஓர் அந்நியராக கருதப்பட்டார், தம் சொந்த சமுதாயத்தில் பாகுபாட்டினை அனுபவித்தார்.
ஆனால், பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடம் படித்த இவர், இந்தியர்களின் வரலாற்றினைக் கற்றுக்கொண்டபோது சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் அவர்கள் ஆற்றியுள்ள பங்கினைப் பற்றி
அறிந்துகொண்டார்.
மேலும் தம் தந்தை ஏன் அவரை வேறொரு மொழியை கற்றுக்கொள்ள வற்புறுத்தினார் என்பதையும் புரிந்துகொண்டார். அதன் பின்னரே, இந்தியப் பாரம்பரியத்தை பெருமையோடு தமது நெஞ்சில் சுமந்துகொண்டு தமது அடையாளத்தை எண்ணி சங்கடப்படுவதற்கு காரணமே இல்லை என்பதை உணர்ந்தார்.
'அவேர்' சங்கத்தின் ஆய்வு தலைவரான ஷெய்லி ஹிங்கொராணியும் மூத்த திட்ட நிர்வாகி, வர்ஷா சிவராமும் இணைந்து இந்த நூலிலுள்ள கதைகளைத் தொகுத்துள்ளனர்.
ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வர்ஷா, 25, இந்த நூலை அவர் தொகுக்கும்போது கொவிட்-19 டெல்டா கிருமி வகை பரவத் தொடங்கிய காலகட்டம் என்றார். அப்போது இந்தியர்களை இழிவாகப் பேசும் சம்பவங்களும் அவர்களுக்கு எதிரான குற்றங்
களையும் பற்றி கேள்விப்பட்டதாக கூறியிருந்தார்.
இவ்வாறு மற்றவர்கள் இந்தியர்களைப் போதுமான ஆதாரமில்லாமல் தவறாக குற்றஞ்சாட்டுவதை ஒழிக்க இந்தியர்களின் அனுபவங்களை அவர்களுடைய சொந்தப் பார்வையில் எழுதி முறையாக வெளியிடுவது அவசியம் என்று உணர்ந்தார்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடியேற வந்த வர்ஷாவின் பெற்றோர் அவரை வளர்த்த விதம் சிங்கப்பூரில் வளரும் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் மாறுபட்டதாக அமைந்தது. பள்ளிக்குச் சென்றபோது 'சிங்லிஷ்' மொழி, உள்ளூர் பாரம்பரிய கூறுகள் போன்றவற்றைப் பற்றி அவர் கற்றுகொள்ள ஆரம்பித்தார். ஒரு பக்கம் அந்நியப்படுத்தப்பட்டாலும், இன்னொரு பக்கம் புதுக் கலாசாரத்தில் மூழ்கத் தொடங்கினார்.
சரண்யா, வர்ஷா உட்பட பல இந்தியர்களின் தனிப்பட்ட கதைகளின் மூலம் சிங்கப்பூர் இந்தியராக வளர்வதற்கு எல்லையில்லா அர்த்தங்களை
கண்டுபிடிக்கலாம். எனவே, சிங்கை இந்தியர்களுக்கு சமர்ப்பணமாக இந்த நூல் அமைகிறது.
உள்ளூர் புத்தகக் கடைகளிலும் இணையத்தின் மூலமும் 'வாட் வி இன்ஹெரிட் - குரோவிங் அப் இந்தியன்' நூலை வாங்கலாம்.
கூடிய விரைவில் இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளும் இதில் இடம்பெறாத மற்ற சில இந்தியர்களின் கதைகளும் புதியதோர் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட இருக்கின்றன. இப்பக்கத்தில் இந்திய பெண்கள் தொடர்பான இலக்கியத் தகவல்களும் சேர்க்கப்படும்.