சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில் பாதை களிலுள்ள 170 நிலையங்களின் பெயர்களையும் 12 நிமிடங்களில் ஒப்புவித்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் சஸ்திக் வேல் விவேக். எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் பாதைகளில் உள்ள அனைத்து நிலையங்களின் பெயர்களையும் நிலையக் குறியீட்டுடன் சொல்லி அசத்துகிறார் இந்த பாலர் பள்ளி மாணவர்.
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி இச்சாதனையை நிகழ்த்தியபோது சஸ்திக்கிற்கு ஐந்து வயது ஐந்து மாதங்கள்தான். இவருக்கு எட்டு வயதில் லக்ஷைன் வேல் விவேக் என்ற அண்ணனும் ஐந்து வயதில் சாத்விகா ஸ்ரீ விவேக் என்ற இரட்டைச் சகோதரியும் உள்ளனர்.
“சஸ்திக்கிடம் பிறந்தது முதலே கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகமாக இருந்தது. வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் கிடைக்கப்பெறும் தகவல்களையும் இயல்பாகவே நினைவில் வைத்துக்கொள்வார். மறுமுறை அதைப்பற்றி பேசும்போது மிகத் துல்லியமாகத் தானே தகவல்களைப் பகிர்ந்துகொண்டு எங்களைப் பலமுறை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்,” என்று கூறினார் எம்ஆர்டி நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் சஸ்திக்கின் தந்தை விவேக் செல்வம், 37.
சாரதா பாலர் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாணவரான சஸ்திக்கிற்கு ரயில் பயணம் மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் தந்தை அத்துறையில் பணிபுரிவதால் ரயில் போக்குவரத்து தொடர்பான பல்வேறு தகவல்களை அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்வது சஸ்திக்கின் வழக்கம். ஒரு முறை படித்துவிட்டால் அல்லது பார்த்துவிட்டாலே அதை வெகு இயல்பாக நினைவில் வைத்துக்கொள்வார்.
“சஸ்திக் பேச ஆரம்பித்ததிலிருந்து எங்காவது நாங்கள் வெளியில் கிளம்பினால் ரயிலில் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார். நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படிச் செல்லலாம் என்ற கலந்துரையாடலிலும் ஆர்வமாகப் பங்கெடுப்பார்,” என்று கூறினார் இவரின் தாயாரும் இல்லத்தரசியுமான திவ்யா அருணாச்சலம், 35.
தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்கு ரயிலில் செல்லும்போது ரயில் பாதை வரைபடத்தின் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டு அதைத் தினமும் படித்துக்கொண்டே வருவார் சஸ்திக்.
“சில மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் நாங்கள் பேஃபிரண்ட் பகுதிக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பரபரப்பாக நாங்கள் எவ்வழியில் செல்லலாம் என்று பேசிக்கொண்டிருந்தபோது எளிமையாகவும் மிக விரைவாகவும் பயன்படுத்தக்கூடிய ரயில் பாதையை சஸ்திக் தாமதிக்காமல் கூறியது எங்களுக்கு வியப்பை அளித்தது,” என்று நினைவுகூர்ந்தார் திவ்யா.
இச்சம்பவத்திற்குப் பின்னரே இந்தச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற அவரின் பெயரைப் பதிவுசெய்யலாம் என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறினார். சஸ்திக் கூறும் வழியை கூகல் வரைபடமும் பெரும்பாலான நேரங்களில் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய அண்ணனிடமிருந்தும் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் சஸ்திக், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். 100 பொது அறிவு கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்ததற்காக இவர் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
சஸ்திக் பெரும்பான்மையான நாடுகளின் பெயர்களையும் அந்நாடுகள் அமைந்துள்ள பகுதிகளையும் அவற்றின் தலைநகரங்களையும் நினைவில் வைத்து அசத்துகிறார்.
இவர்களின் வீடு விளையாட்டுப் பொருள்களாலும் வரைபடங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பிள்ளைகளுக்குத் தொலைக்காட்சி, கைப்பேசி போன்ற தொழில்நுட்பச் சாதனங்களைத் தருவதைத் தவிர்க்கின்றனர் பெற்றோர். முடிந்தவரை புத்தகங்களையும் அறிவுசார்ந்த, பொழுதுபோக்கு விளையாட்டுப் பொருள்களையும் விளையாடத் தருகின்றனர்.
“பிள்ளைகளுடன் அதிக நேரம் விளையாடுவதும் பேசுவதும் அவர்களுடைய உலகத்தில் நாம் நுழைய ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும்போதும் பிள்ளைகள் ஆர்வத்துடன் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும். அந்த ஆவலைத் தூண்டுவது பெற்றோரின் கடமை என்றே கருதுகிறோம்,” என்றார் திவ்யா.
“கற்றலைத் திணிக்க முடியாது; அதனால் பயனும் இல்லை. மாறாக பிள்ளைகளின் புத்தாக்கச் சிந்தனையைக் கட்டுப்படுத்தி அவர்களின் ஆர்வத்தைக் குலைத்துவிடும். எந்தவொரு கற்றல் வழிமுறையும் மகிழ்ச்சியானதாக பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் பெற்றோர் என்ற முறையில் உறுதியாக இருக்கிறோம். அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளுக்குப் பிடிக்காத ஒன்றை நாங்கள் திணிப்பதில்லை,” என்று கூறினார் சஸ்திக்கின் தந்தை.