ஆ. விஷ்ணு வர்தினி
சிறையில் அடைபட்டிருந்த நிலையிலும் திரு சிவா (உண்மைப் பெயரல்ல), தமது சாதாரண நிலைத் தேர்வில் 11 புள்ளிகளுடன் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தானா மேரா சிறைச்சாலையில் இருக்கும் இவர், சிறைக்கு வருவது இது ஐந்தாவது முறை. ஆனால் இதுவே கடைசி முறை என்று அவர் உறுதியெடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் ‘ஓ’ நிலைத் தேர்வுக்காக ஆயத்தமாகத் தொடங்கியபோதுதான், கல்வியில் தாம் பெரிதும் பின்தங்கியிருந்ததை உணர்ந்தார் 37 வயது சிவா. 22 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நிலை இரண்டில் அவர் படிப்பை நிறுத்தியதை அடுத்து மீண்டும் கடந்த ஆண்டு சிறையில் வகுப்பு நேரத்திற்கு அப்பால் வார இறுதிகளிலும் சிரத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.
“என் நேரத்தை அர்த்தமுள்ள வழியில் செலவிடுகிறேன் என்று நினைத்து எனக்கே நான் ஊக்கமளித்துக்கொண்டேன்,” என்றார், வணிகத் துறையில் பட்டயப் படிப்பைத் தற்போது சிறையில் மேற்கொண்டு வரும் சிவா.
தம்பி கிருஷ்ணா, அம்மா கலை (உண்மைப் பெயர்கள் அல்ல) ஆகிய இருவருக்காகவும் இத்தேர்ச்சியை அர்ப்பணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
போதையர் மறுவாழ்வு நிலையத்தில் ஈராண்டுகளாக இருக்கும் தம்பி கிருஷ்ணாவுக்கு, சிவாவின் தேர்ச்சி பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக பிடிபட்டுள்ள கிருஷ்ணா, தம் வழக்கநிலைத் தேர்வை மீண்டும் 2018ல் சிறைப் பள்ளியின் மூலம் எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தார்.
“அண்ணன் தமது சுய மேம்பாட்டுக்காக முயற்சி எடுப்பதைப் பார்த்து பெருமைப்படுகிறேன். இருவரும் இனி திருந்தி வாழவே ஆசைப்படுகிறோம்,” என்றார் 32 வயது கிருஷ்ணா. தம் வாழ்க்கையில் பத்தாண்டுகளை விரயமாக்கியதையும் சேமிப்பு எதுவும் இல்லாத நிலையையும் எண்ணிக் கவலைப்படுவதாக அவர் கூறினார்.
மாதம் இருமுறை இருவரையும் தவறாமல் சந்தித்து வருகிறார் தாயார் திருவாட்டி கலை. 1998ல் கணவரின் மறைவுக்குப் பின்னர் இரு பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராய் வளர்த்தார். பகுதிநேர வேலைகள் செய்து பிள்ளைகளைக் கரையேற்ற அவர் முயன்றுவந்தபோதும் வேலைப் பளுவால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாமல் போனது. 2003ல் முதல்முறையாக சிவா பிடிபட்ட சமயத்தில் நிலைகுலைந்து போனார் இத்தாயார்.
தீய நண்பர்களின் நட்பு, போதைப்பொருள் எனத் தம்மைப் போலவே தம்பி கிருஷ்ணாவும் தவறான பாதையில் சென்றது, தமக்கு வருத்தமளித்ததாக சிவா குறிப்பிட்டார்.
சிவாவைக் குறித்து திருவாட்டி கலை கூறுகையில், “இன்று அவர் அடைந்துள்ள தேர்ச்சிநிலை, எனக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது,” என்றார்.
தற்போது இரு மகன்கள் மீதும் தமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதை தவறிச் சென்ற இருவரும் தங்கள் வாழ்வை மாற்றியமைத்துக்கொள்ளும் கனவில் உள்ளனர். விடுதலைக்குப் பின் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ எனப்படும் நீர்வேளாண்மை சார்ந்த வணிகம் ஒன்றைச் சொந்தமாகத் தொடங்கவும் அம்மாவுக்குத் துணையாக இருக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வர்த்தக முயற்சியே இருவருக்கும் நம்பிக்கை ஊட்டும் கனவு என்பதை உணர்ந்துள்ள திருவாட்டி கலை, தம்மால் ஆன ஆதரவைத் தரக் காத்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விடுதலையாக உள்ளார் சிவா. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்குடும்பம் இணைய உள்ளது. அத்தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக திரு கிருஷ்ணா தெரிவித்தார். அதோடு தங்களின் மீது நம்பிக்கை இழக்காத தாயாரிடம் இரு மகன்களும் மன்னிப்பும் கோரியுள்ளனர்.