ரச்சனா வேலாயுதம்
இணைய மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்கு எதிராக இயங்கக்கூடிய ஒரு செயலியை உருவாக்கியதுடன் குற்றச்செயல்களில் காணப்படும் போக்கை ஆராய்ந்தும் வருகிறார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஜோஷுவா ஜேசுதாசன், 28.
இணைய மோசடிகளை எவ்வாறு கண்டறியலாம், அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்று மக்களுக்கு எடுத்துக்கூற ‘ஷோப்பீ’ இணைய வர்த்தகத் தளத்தில் ஓர் இணைய விளையாட்டை ஜோஷுவா தம் குழுவுடன் தயாரித்துள்ளார்.
விளையாட்டில் சரியாகப் பதிலளிப்பவர்களுக்கு ஷோப்பீ சலுகைகளும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும். கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்தச் செயலி, இணைய வர்த்தகத் தளத்தில் மோசடி தொடர்பான கல்விக்காக உருவாக்கப்பட்ட முதல் விளையாட்டுத் திட்டமாகும். தற்போது தினமும் சுமார் 11,000 விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
“மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதைவிட, விளையாட்டுவழி அறிவுரை கூறுவதே சிறந்த வழி,” என்றார் ஜோஷுவா.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மோசடிக்காரர்கள் பல நூதன வழிகளை நாடுவதால் அதற்கேற்ப காவல்துறையும் மாற்றுச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
தொழில்நுட்ப ஆர்வமுடைய இளம் தலைமுறையினர், இணைய மோசடிகளுக்கு எளிதில் ஆளாகலாம் என்பதால் மோசடி தொடர்பான இந்த ‘ஷோப்பீ’ விளையாட்டு, குறிப்பாக அவர்களுக்குப் பயனளிக்கும் என்றார் ஜோஷுவா.
சிறு வயதில் ஜோஷுவா தம் பெற்றோருடன் தொண்டூழியப் பணிகளுக்காக பாப்புவா நியூ கினிக்குச் சென்றார். தம் பெற்றோரைப் போலவே தாமும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறையில் சேர முடிவு செய்தார்.
அவர் ‘2013 அதிபர் கல்விமான் உபகாரச் சம்பளம்’, ‘சிங்கப்பூர் காவல்துறையின் வெளிநாட்டு உபகாரச் சம்பளம்’ ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் படிப்பையும் முடித்துவிட்டு தற்போது காவல் துறையில் முக்கியப் பதவி வகிக்கிறார், ஜோஷுவா.
காவல் துறையில் மிக இளம் வயதிலேயே சேர்ந்த அவர், தற்போது குயின்ஸ்டவுன் அக்கம்பக்க காவல் நிலையத்தின் மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார்.
“இந்தத் துறையில் எல்லாருக்கும் என்னால் உதவ முடியாது என்று தெரியும். ஆனாலும் சமுதாயப் பிரச்சினைகளுக்கு சிங்கப்பூர் காவல்துறை தொடர்ந்து தீர்வுகள் காணும் என்று நம்புகிறேன்,” என்றார். பல்வேறு குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த, தாம் தொடர்ந்து சமூக அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக ஜோஷுவா கூறினார்.