இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள ஆஷிஷ் ஜெர்ரி செளத்ரி என்ற 25 வயது மாணவருக்கு ஒரே கனவுதான். சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். 101 நாள்களில் 7,000 கிலோமீட்டர் கடந்து வந்துள்ளார் இவர்.
இந்தியாவின் கிராமத்துப் பள்ளிகள், மலேசியாவின் ‘குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல்’ பள்ளி ஆகியவற்றை அடுத்து சிங்கப்பூர் போஜ்பூரி சங்கம், ரோட்டரி கிளப், ஸ்ரீ லக் ஷ்மிநாரா யணன் கோயில் முதலிய இடங்களுக்குக் கடந்த வாரம் சென்று தமது இயக்கத்தைப் பற்றியும் இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்தும் பேசினார். லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கம் இவரது முயற்சியை மெச்சி, பாராட்டு விழா ஒன்றினை கடந்த செவ்வாய்க்கிழமை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள காயத்ரி உணவகத்தில் ஏற்பாடு செய்தது.
ராஜஸ்தானின் மணல்மேடுகள் நிறைந்த ஜுன்ஜுனு பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ஜெர்ரி. நீர்வளங்கள் இல்லாத அவரின் கிராமத்தில் தினசரி பயன்பாட்டுக்கு மழை நீரைச் சேகரித்தாகவேண்டும். அங்கு கோடைக்காலத்தில் வெப்பநிலை 50 டிகிரி வரை அதிகரிக்கும்; பனிக்காலத்தில் -5 டிகிரி வரை குறையும்.
தங்கையுடனும் தாத்தாவுடனும் சிறுவயதிலிருந்தே ஜெர்ரி தினமும் உடற்பயிற்சி மேற்கொண்ட காடு, இப்போது குப்பைமேடாக உள்ளது. பருவநிலை மாற்றத்தாலும் மக்களின் அலட்சியத்தாலும் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்தபோது இதற்கென ஓர் இயக்கத்தைத் தொடங்கவேண்டும் என முடிவெடுத்தார் ஜெர்ரி.
புதுடெல்லியிலிருந்து ஜுன்ஜுனு வரை, புது டெல்லியிலிருந்து ஜெய்சால்மர் வரை, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை என மிதிவண்டியில் அவர் மேற்கொண்ட விழிப்புணர்வுப் பயணங்கள் ஏராளம். மாணவர்களையும் அமைப்புகளையும் சந்தித்து சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
“ஒவ்வொரு மாணவரும் ஒரு மரம் நட வேண்டும் என்று அறிவுரை கூறுவேன்,” என்றார் அவர்.
இவர் படித்த கிராமத்துப் பள்ளியில் இவர் நட்ட வாகை மரம் இன்று உயர்ந்து வளர்ந்து நிற்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
ஐந்து நாடுகளைக் கடக்கவேண்டும் என்ற அவரது குறிக்கோளை நிறைவேற்றும் நோக்கில் தற்போது இந்தோனீசியாவில் இருந்து பாத்தாம், பிந்தான் பகுதிகளுக்கு மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூரின் எழில்மிகு இயற்கைச் சூழலும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட மிதிவண்டிப் பாதைகளும் ஜெர்ரியைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
“எனது கிராமத்தை சிங்கப்பூர் போல் மாற்ற விரும்புகிறேன்,” என்றார் ஜெர்ரி.
செய்தி: விஷ்ணு வர்தினி