வி.கே. சந்தோஷ்குமார்
இரு கைகளிலும் 2 கிலோ எடையை ஏந்தியவாறு ஓடுபவரை சிங்கப்பூரில் காண்பது அரிது. இதை டாக்டர் ஸ்ரீநிவாஸ் சுப்ரமணியம் வாரம் மூன்று முறை வெறுங்காலுடன் மேற்கொண்டு வருகிறார். சிறுநீரக நிபுணரான இவர், ஒவ்வொரு முறையும் 10 கிலோமீட்டர் தூரம்வரை ஓடுவதாகக் கூறினார்.
“எடை தூக்கும்போது அந்தக் கூடுதல் பாரத்தை உங்களின் கால்கள் சுமக்க வேண்டியுள்ளது. இதனால் கால் தசைகள் வலுப்பெறுகின்றன. அதேவேளை எடைகளைக் கைகளில் நான் பிடித்திருப்பதால் எனது கையின் தசைகளுக்கும் பயிற்சி கிடைக்கிறது,” என்றார் 46 வயதுடைய டாக்டர் ஸ்ரீநிவாஸ்.
வேலை காரணமாக 2009ல் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த டாக்டர் ஸ்ரீனிவாஸ், கூடுதல் கலோரிகளைக் குறைப்பதே எடையுடன் ஓடும் இந்தப் பயிற்சியின் நோக்கம் என்றார்.
காயம் ஏற்படலாம் என அஞ்சி தொழில்முறை ஓட்ட வீரர்கள் எடையுடன் ஓடுவதைப் பொதுவாகத் தவிர்க்க முயல்வர். இருப்பினும் வலுவான உடல்நிலை இருப்பவர்களுக்கு இத்தகைய உடற்பயிற்சி மேலும் வலுசேர்க்கும் என்றார் டாக்டர் ஸ்ரீநிவாஸ்.
ஓடும் வேகம், ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் இந்த உடற்பயிற்சி, மூட்டுகளை வலுப்படுத்தி காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் தன்மையையும் பெற்றது.
கடந்த 20 ஆண்டுகளாக ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறிய டாக்டர் ஸ்ரீநிவாஸ், இதுவரை தமக்குக் காயம் ஏற்பட்டதில்லை என்றார்.
“நான் வழக்கமாக மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவேன். எடை தூக்கியிருந்தால் என் வேகத்தை மணிக்கு 8 கிலோமீட்டருக்குக் குறைத்துக்கொள்வேன்,” என்றார் அவர்.
ஓடுவது தமக்கு மிகவும் விருப்பமான ஒரு நடவடிக்கை என்று கூறிய டாக்டர் ஸ்ரீநிவாஸ், உதய சூரியனின் இளவெயிலும் குருவிகளின் கீச்சொலியும் நிறைந்த காலைப் பொழுதைத் தாம் ரசிப்பதாகத் தெரிவித்தார். அண்டைவீட்டாரைப் பார்த்துப் புன்னகைத்து வணக்கம் கூறுவதையும் அவர் வழக்கமாக்கிக்கொண்டார்.
“இவ்வாறு செய்வது மனநலனுக்கும் நல்லது,” என்றார் அவர்.
“வெறுங்காலுடன் ஓடுவதால் பாதத் தசைகளைப் பிடித்து விடுவது போன்று இருக்கும்,” என்றார் அவர்.
தனியார் மருந்தகத்தில் ஒவ்வொரு நாளும் 9 மணிநேரம் வரை பணிபுரியும் 55 கிலோ எடையுடைய டாக்டர் ஸ்ரீநிவாஸ், தமது ஓட்டப் பயிற்சியின் மூலம் தம் உடல் மேலும் வலிமை பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எடையுடன் ஓடவேண்டும் என்று எல்லாருக்கும் நான் கூறமாட்டேன். இருப்பினும் ஓடுவதை நான் ஊக்குவிப்பேன். அதில் ஒருவித இன்பம் அடங்கியிருக்கிறது. உங்களின் நாளை உற்சாகத்துடன் தொடங்க முடியும்,” என்றார் அவர்.
ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு