ஆ. விஷ்ணு வர்தினி
நீரிழிவு நோய் முழுவீச்சாக சசிதரனைத் தாக்கியபோது, அவர் தன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தார்.
புது வீடு, புதிதாக மணந்துகொண்ட மனைவி என அனைத்தும் நல்லவிதமாகக் கைகூடி வந்தன. மனம் முழுக்கக் கனவுகளோடு வலம்வந்த வேளையில், நீரிழிவால் அவரது வலது பாதத்தில் சிறு பகுதியை அகற்றவேண்டிய கட்டாயம். அதைத் தொடர்ந்து பல இழப்புகளை அவர் சந்திக்க நேரிட்டது.
16 வயதிலிருந்து ‘டைப் 2’ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சசிதரனுக்கு, 21 வயதில் ‘டைப் 1’ நீரிழிவு நோய் ஏற்பட்டது. தினமும் ‘இன்சுலின்’ ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.
தாத்தா, தந்தை என சசிதரனின் உறவினர் பலருக்கு நீரிழிவு நோய் இருந்தபோதும் அது தொடர்பான ஆபத்துகளை அவர் அறிந்திருக்கவில்லை. விரைவு உணவுவகைகளையும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களையும் தொடர்ந்து உட்கொண்டார். பணிச்சுமைக்கிடையே உடற்பயிற்சியும் செய்யவில்லை.
32 வயதில் அவருக்கு வலது காலில் கடுமையான தொற்று ஏற்பட்டது. முட்டிக்குக்கீழ் உள்ள பகுதியை முழுவதும் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியபோது சசிதரன் அதிர்ச்சிஅடைந்தார். குடும்பத்தில் வேறு யாருக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதில்லை.
“எனக்குக் குழப்பமாக இருந்தது. மனமுடைந்து போனேன். வேறு மருத்துவரை நாடியபோது, முதலில் சிறு பகுதியை மட்டும் அகற்றிப் பார்க்கலாம் என முடிவானது. மீண்டும் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது,” என்றார் தற்போது 40 வயதாகும் சசிதரன் அன்பழகன்.
செயற்கைக் கால், பின்னர் செயற்கைப் பாதம் ஆகியவற்றைப் பொருத்தி இருந்தார் சசிதரன். ஏறத்தாழ மூன்று மாதங்கள் சக்கர நாற்காலியில் நடமாடினார்.
கணக்கரான அவருக்கு அதிர்ஷ்டவசமாக, ஓராண்டு கழித்து வேறொரு நிறுவனத்தில் நிதித் துணை நிர்வாகியாகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் மறு ஆண்டு அவரின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.
குடும்பத்தாரின் ஆதரவால் தொடர்ந்து சசிதரன் உழைத்தபோதும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க இரவில் அல்லது வார இறுதியில் வாடகை உந்துவண்டி ஓட்டிப் பணம் ஈட்ட முயன்றார். வேலைப்பளு காரணமாக மீண்டும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைக்குத் திரும்பினார்.
2019 ஆம் ஆண்டு இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இடது கையும் காலும் செயல் இழந்த நிலையில் வாழ்க்கையின்மீது நம்பிக்கை இழந்தார் சசிதரன். சில மாதங்கள் கழித்து சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்ததும் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்றுகூட எண்ணினார்.
“பெற்றோருக்குப் பெரிய பாரமாக இருந்ததை உணர்ந்தேன். பக்கவாதம் ஏற்பட்டு எத்தனை நாள் முடங்கி இருப்பேன் என்று யாருக்கும் தெரியாது. எப்படியோ ஆறு மாதங்களில் குணமடைந்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் மேலுமோர் இடி. பதின்ம வயதிலிருந்தே உடல் நலனில் கவனம் செலுத்தாமற் போனேனே என்று வருத்தப்படாத நாளே இல்லை,” என்றார் சசிதரன்.
கடந்த ஈராண்டுகளாக, வாரம் மூன்று முறை ‘டயாலிசிஸ்’ எனும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்துகொள்கிறார். வாழ் நாள் முழுவதும் அவர் இதை மேற்கொண்டாக வேண்டும்.
ஒவ்வொரு சிகிச்சை அமர்வும் நான்கு மணி நேரம் நீடிக்கிறது. பெரிய கனவுகள் காண்பதைக் கைவிட்டாலும் உலகெங்கும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலை இன்னும் உறுதியாகப் பிடித்துள்ளார் சசிதரன்.
தற்போது தன்னுரிமைக் கணக்காளராகப் பணியாற்றும் இவர் யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக நடமாடுகிறார்.
இளமையில் இனிமையைத் தொலைத்த வருத்தத்தில் ஆழ்ந்துவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான உறுதியை அதே இளமைக்காலம் தந்துள்ளதாகக் கருதுகிறார் சசிதரன்.