மாதங்கி இளங்கோவன்
புகழ்பெற்ற பறையிசைக் கலைஞர் வேலு ஆசான் வழிகாட்டுதலுடன் பறையிசையைப் பற்றி மேலும் ஆழமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ‘டமாரு சிங்கப்பூர்’ குழுவுக்குக் கிடைத்தது.
இந்திய தாள வாத்திய இசையை முறையாகக் கற்றுக்கொடுக்கவும் இந்த இசையை சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் உலகெங்கும் ஒலிக்க வைக்கவும் பற்பல முயற்சிகளில் ‘டமாரு சிங்கப்பூர்’ ஈடுபட்டு வருகிறது.
அவ்விதத்தில் இந்தக் குழுவை நிறுவிய அக்ஷரா திரு, இந்தியாவில் தாம் சந்தித்த வேலு ஆசானை சிங்கப்பூருக்கு வரவழைத்துச் சிறப்புப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
சிறுவனாக இருந்ததிலிருந்தே தம்முடன் பயணம் செய்த ஒரு கலை இந்தப் பறையிசைதான் என்றார் வேலு ஆசான் என்று அழைக்கப்படும் திரு வேல்முருகன்.
தந்தைவழி தாம் கற்ற இந்தக் கலை, தமது வாழ்விற்குப் பொருள் தந்தது என்றார் அவர்.
மதுரை அலங்காநல்லூரில் வளர்ந்த இவர், பறையிசையை இந்தியாவில் மட்டுமல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக மலேசியா, சீனா, துபாய், இலங்கை, சிங்கப்பூர் எனப் பல நாடுகளிலும் படைத்துள்ளார்.
தற்போது ‘சமர்’ கலைக்குழுவின் தலைவராக உள்ளார் வேலு ஆசான்.
இம்மாதம் நான்கு நாள்களுக்கு நீடித்த பயிலரங்கு, ‘டமாரு சிங்கப்பூர்’ குழுவினரின் கற்றலுக்கு மெருகூட்டியது.
மேலும், அவர்கள் முன்பு படைத்திருந்த பறையிசைக்கு எந்த மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள அரிய வாய்ப்பாக இப்பயிலரங்கு அமைந்தது.
“பறை இசைக்கருவியை எவ்வாறு முறையாகக் கைகளில் பிடித்துக்கொள்வது, பறையாட்டம் ஆடும்போது அக்கருவியைப் பிடித்து எவ்வாறு கீழே இறங்கி உடனடியாக நிற்பது என்பதையெல்லாம் வேலு ஆசான் படிப்படியாக எங்களுக்குக் கற்றுத் தந்தார்,” என்று ‘டமாரு’ குழுவைச் சேர்ந்த கலைஞர் சன்ஜீவ் சேகரன் கூறினார்.
“முகபாவனைகளை எப்படி வெளிப்படுத்துவது என அழகாகக் கற்றுத்தந்தார் அவர். குழுவினருடன் ஒருங்கிணைந்து ஒரே சீராகப் படைப்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார்,” என்றார் ‘டமாரு’ குழுக் கலைஞர் மித்ரா நாயுடு.
சிங்கப்பூரில் கலைஞர்களுக்குப் பறையாட்டத்தைக் கற்றுக்கொடுப்பதில் பெருமைகொள்ளும் வேலு ஆசான், “தமிழ் மண்ணின் பாரம்பரியக் கலை இது.
மனிதன் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்னரே பிறந்த இந்தக் கலை சாதி, மதம் அறியாது. தெய்வீகமானது கலை,” என்றார்.
வேலு ஆசான் ‘சூரரைப் போற்று’, ‘பேட்ட’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களில் பறையிசை வாசித்திருப்பதுடன் சிலதிரைப் படங்களில் நடித்தும் உள்ளார்.