முட்டைகளை அடுக்கி வைக்கும் அட்டைப்பெட்டிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட, மறுபயனீட்டு மலர்ப் படைப்பு முதல்முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பிற்கு ஓர் இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது.
ஸ்ரீ நாராயண மிஷனின் தாதிமை இல்லம், ஈசூன், உட்லண்ட்ஸ் மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், வாடிக்கையாளர்கள், சேவைப் பயனாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கலைப்படைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஸ்ரீ நாராயண மிஷன் இவ்வாண்டு 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அதையொட்டி, 2.4 மீட்டர் உயரமும் 6.6 மீட்டர் நீளமும் கொண்ட இப்படைப்பு உருவாக்கப்பட்டது.
அமைப்பின் ஆரஞ்சு, மஞ்சள், நீல வண்ணங்களில் 750 பூக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மே 31ஆம் தேதி அன்று இந்தப் படைப்பு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் பதிவானது.
இதனை உருவாக்க, அமைப்பைச் சேர்ந்தோர் ஏறக்குறைய நான்கு மாத காலமாக நேரத்தை அர்ப்பணித்ததாக ஸ்ரீ நாராயண மிஷன் குறிப்பிட்டது.
“முதியோர் தங்கள் கலைத் திறன்களை வெளிப்படுத்த இந்தத் திட்டம் நல்லதொரு தளமாக அமைந்தது. மேலும், அவர்களுக்குள் பெருமையையும் சாதனை உணர்வையும் இம்முயற்சி தூண்டியது,” என்று அது தெரிவித்தது.
செய்தி: சபிதா ஜெயகுமார்