கொவிட்-19: மேலும் 3 புதிய சம்பவங்கள்; ஐவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்
சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக புதிதாக மூன்று சம்பவங்கள் இன்று (பிப்ரவரி 19) உறுதிசெய்யப்பட்டன. இதனையடுத்து, இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.
புதிய மூன்று சம்பவங்களில், இரண்டு தேவாலயங்களுடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று தொடர்பானவை. ஒன்று ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடனும் மற்றது ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்’ தேவாலயத்துடனும் தொடர்புடையவை.
இத்துடன், ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 22 ஆகியுள்ளது. ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்’ தேவாலயத்துடன் தொடர்புடைய, உள்ளூரிலேயே கிருமித்தொற்று பரவிய சம்பவங்கள் மொத்தம் நான்கு ஆகியுள்ளன.
ஆனால், இன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட மூன்றாவது நபர் அண்மையில் சீனாவுக்குச் சென்றிருக்கவில்லை; ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலும் இல்லை.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மேலும் ஐவர் வீடு திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கிராண்ட் ஹயட் ஹோட்டலுடன் தொடர்புடைய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மூவரும் (30வது, 36வது, 39வது நபர்கள்) குணமடைந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) வீடு திரும்பிவிட்டனர்.
மருத்துவமனையில் எஞ்சிய பெரும்பாலோரின் உடல்நிலை சீராகவோ, மேம்பட்டோ வருகிறது. 4 பேர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
#Corona #தமிழ்முரசு