கொவிட்-19 நோயாளிகள் போன இடங்களுக்கு சென்றிருந்தால் கட்டாய கொவிட்-19 பரிசோதனை
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்த அதே இடங்களுக்கு அன்றைய தினம் போனவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டபின், சுகாதார எச்சரிக்கை விடுக்கும் வகையில் சுகாதார அமைச்சு குறுஞ்செய்தி அனுப்பும்.
குறிப்பிடப்பட்ட பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று அவர்கள் கட்டாய கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும்வரை அவர்கள் தொடர்ந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்தது.
கிருமி தொற்றும் ஆற்றல் அதிகரித்துள்ள நிலையில் ‘டிரேஸ்டுகெதர்’, ‘சேஃப்எண்ட்ரி’ தரவுகளைப் பயன்படுத்தித் தொற்றுச் சம்பவங்களைக் கண்டறியும் பணிகளைத் தீவிரமாக்கினால் பெரும் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாவதைத் தடுக்க முடியும் என அமைச்சு தெரிவித்தது.
பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியானாலும் பிறருடன் தொடர்பில் இருப்பதைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியது.
பரிசோதனை நிலையங்களில் கொவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளும் நபர்களுக்கு வழங்கப்படும்.
அடுத்து வரும் நாட்களில் அவர்கள் வீட்டில் பரிசோதனையைச் செய்துகொண்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இதற்கிடையே, மக்கள் ஓரிடத்திலிருந்து வெளியேறும்போதும் அதற்கான பதிவைச் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைத்தொகுதிகள், மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்களில், உணவு, பானக் கடைகள், உடலுறுதிக் கூடங்கள் போன்றவற்றில் இந்த வசதி இருக்கும்.