கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள திரண்ட மக்கள்
டான் டோக் செங் மருத்துவமனையில் தொற்றுக் குழுமம் உருவானதைத் தொடர்ந்து தங்களுக்குத் தொற்று இருக்கிறதா என்பதை அறிய நூற்றுக்கணக்கானோர் கொவிட்-19 இலவசப் பரிசோதனை நிலையங்களில் திரண்டனர்.
சிங்கப்பூரில் உள்ள நான்கு வட்டார பரிசோதனை நிலையங்களின் முன்னால் திங்கட்கிழமை நீண்ட வரிசை காணப்பட்டது.
தொற்றுக் குழுமத்தில் திங்கட்கிழமை நிலவரப்படி 35 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதுபோல் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தொடர்புத் தடம் அறிதல் வழி அடையாளம் காணப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு கூறியிருந்தது.
மேலும், கண்டறியப்படாத சமூகத்தொற்று அபாயத்தைத் தணிக்கும் வகையில், ஏப்ரல் 18 முதல் அந்த மருத்துவமனைக்குச் சென்றோரும் அங்கு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியோரும் இலவச கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
நோய் தொற்றியவர்கள் சென்ற பொது இடங்களில் இருந்தோரும் வேலை செய்தோரும்கூட இப்பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அரசாங்க உதவியுடன் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு மே 3 முதல் மே 16 வரை பரிசோனை நிலையங்களுக்கு நேரடியாகச் செல்லலாம் அல்லது பதிவு செய்துகொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து அங் மோ கியோ, ஜூரோங் ஈஸ்ட், பாசிர் ரிஸ், சின் மிங் போன்ற இடங்களில் உள்ள இலவசப் பரிசோதனை நிலையங்களுக்கு ஏராளமானோர் சென்றனர்.
திங்கட்கிழமை முற்பகல் 11 மணி நிலவரப்படி சுமார் 300 பேர் அங் மோ கியோ பரிசோதனை நிலையம் முன் காணப்பட்டதாகவும் ஒரு மீட்டர் இடைவெளியுடன் 300 மீட்டர் தூரத்திற்கு வரிசை நீண்டு இருந்ததாகவும் சாவ்பாவ் நாளிதழ் குறிப்பிட்டது.