'வெளிநாட்டு ஊழியர்கள் வழக்கம்போல வேலைக்குச் செல்லலாம்'
காக்கி புக்கிட்டில் உள்ள ‘தி லியோ’ என்ற விடுதியில் தங்கியிருந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து, நேற்று (பிப்ரவரி 10) இரவு மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் “வெளிநாட்டு ஊழியர்கள் வழக்கம்போல வேலைக்குச் செல்லலாம். சம்பந்தப்பட்ட பங்ளாதேஷ் ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, லியோ தங்குவிடுதியைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் வழக்கம்போல வேலைக்குச் செல்லலாம் என்பதே அதன் தொடர்பிலான ஆகக் கடைசி செய்தி.
நேற்றுக் காலை அங்கிருந்து பணிக்குச் சென்ற ஊழியர்களிடம், "வேலை பார்க்க வேண்டாம், திரும்பிச் செல்லுங்கள்," என்று அவர்களின் முதலாளிகள் தெரிவித்தனர். ஊழியர்கள் நேற்று வேலையிடங்களுக்குச் சென்றபோது அவர்கள் மீண்டும் விடுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
வேலையிடங்களில் இருந்து திருப்பிவிடப்பட்ட ஊழியர்கள் பலரும் காக்கி புக்கிட் விடுதியில் வந்து இறங்கியதை நேற்றுக் காலை காணமுடிந்தது. அவர்களில் பலரும் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். பலரும் மளிகை சாமான் பைகளுடன் காணப்பட்டனர்.
விடுதியின் பொது இடங்களில் துப்புரவாளர்கள் கிருமிநாசினிகளை அடித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சுத்தம் செய்து கொண்டு இருந்ததைக் காண முடிந்தது.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட 39 வயது பங்ளாதேஷ் ஊழியர் இப்போது தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த நபர் பிப்ரவரி 7ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் லிட்டில் இந்தியாவில் இருக்கும் முஸ்தபா சென்டருக்குச் சென்றிருந்தார்.
“இந்தச் செய்தி பற்றி இன்று காலைதான் எங்களுக்குத் தெரிய வந்தது. எங்களில் சிலருக்கு கிருமித் தொற்றிவிடுமோ என்று பயமாக உள்ளது,” என்றார் அதே விடுதியில் தங்கியுள்ள பங்ளாதேஷ் நாட்டவரான 31 வயது உட்டின்.
இதனிடையே, சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா கிருமி பற்றி ஊழியர்களுக்குத் தெரியும் என்றும் ஆனால் அந்தக் கிருமி சீன ஊழியர்களைத்தான் தொற்றும் என்று பலர் நினைத்ததாகவும் முத்து பழனிவேல், 31, என்ற துரப்பண இயந்திரத்தை இயக்கும் ஊழியர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் அந்தக் கிருமி இப்போது பங்ளாதேஷ் ஊழியரைப் பிடித்துவிட்டது. இது பலருக்கும் பயத்தைக் கிளப்பிவிட்டு இருக்கிறது என்று இந்தியாவைச் சேர்ந்த அந்த ஊழியர் தெரிவித்தார்.
இவ்வேளையில், கிருமியால் பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர் அவர் வேலை பார்க்கும் இடத்திலும் தங்கியிருந்தார் என்றும் ஆனால் எவ்வளவு நாட்களாகத் தங்கியிருந்தார் என்பது தெரியவில்லை என்றும் தி லியோ விடுதியை நடத்தும் நிறுவனம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர் தங்கியிருந்த தி லியோ விடுதி மூடப்பட்டு இருக்கிறது. அது சுத்தப்படுத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.
அந்த பங்ளாதேஷ் ஊழியர் அறையில் அவருடன் சேர்ந்து இருந்து வந்ததாக நம்பப்படும் இதர நான்கு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
காக்கி புக்கிட் விடுதியில் சுமார் 4,100 ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா, பங்ளாதேஷ், சீனா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள். அங்கு 365 அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 12 ஊழியர்கள் தங்கமுடியும். ஒவ்வொரு அறையிலும் தனித்தனி சமையல், கழிவறை வசதிகள் இருக்கின்றன.
காக்கி புக்கிட் தி லியோ விடுதியின் உரிமையாளரான எம்இஎஸ் குழுமம் தன்னால் ஆன அனைத்தையும் செய்து அதிகாரிகளுக்கு உதவி வருவதாக அதன் நிறுவனர் எஸ்.எம்.ஏ. ஜலீல் தெரிவித்துள்ளார்.