கொரோனா கிருமித்தொற்று: ஜப்பான் சொகுசுக் கப்பலில் 100க்கு மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பு
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அந்தக் கப்பலில் இருக்கும் இந்தியர்கள் தங்களை மீட்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தக் கப்பலிலிருந்து இறங்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தக் கப்பல் ஜப்பானின் யோக்கஹாமா கரைக்கு அருகில் பயணிகள், ஊழியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்த மற்றவர்களுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கப்பலில் இருக்கும் 2,500 பயணிகள் அவர்களுக்கான அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு அவர்களது அறைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் சில நிமிடங்களுக்கு மற்றவர்களுடன் ஆறு அடி இடைவெளியில் சற்று நேரம் நடக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், அந்தக் கப்பலின் சுமார் 1,000 ஊழியர்கள் கீழ்த்தளத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். பயணிகளுக்கு உணவு தயாரிப்பது, அவர்களது அறைகளுக்கு எடுத்துச் செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் நேரடித் தொடர்பில் இருப்பதுடன் ஒரே இடத்தில்தான் உணவருந்துகின்றனர்.
இதனால், அவர்களில் யாருக்காவது கிருமித் தொற்று ஏற்பட்டால், அவர்களிடையே வேகமாகப் பரவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றைய (பிப்ரவரி 10) நிலவரப்படி, சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் அமெரிக்கர்கள் என்று கூறப்பட்டது.
சொகுசுக் கப்பலில் ஊழியர்களின் நிலை பற்றி பினய் குமார் சர்க்கார் எனும் இந்தியர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில், அந்தச் சொகுசுக் கப்பலில் 132 இந்தியப் பயணிகளும் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் இந்தியர்களும் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கப்பல் ஊழியர்களில் இந்தியர்களும் உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.
மேலும், பினய் குமார் வெளியிட்ட பதிவில் தன்னுடன் சேர்த்து தமது சகாக்களையும் கப்பலிலிருந்து வெளியே கொண்டுவரும்படி இந்திய அரசங்கத்துக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
#தமிழ்முரசு #சொகுசுக்கப்பல் #டைமண்ட்பிரின்சஸ்