கொரோனா கிருமித்தொற்று: 300 டிபிஎஸ் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேற்றம்
மரினா பே நிதி நிலையத்தில் (MBFC) ஒரு பணியாளருக்கு ‘கொவிட்-19’ எனப்படும் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 300 டிபிஎஸ் பணியாளர்கள் அந்தக் கட்டடத்தில் இருக்கும் அவர்களது அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.
மரினா பே நிதி நிலைய மூன்றாவது கோபுரத்தின் 43வது மாடியில் உள்ள டிபிஎஸ் ஆசியா சென்ட்ரல் அலுவலகத்தில் ஒருவருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 12) பிற்பகல் வெளியிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்று குறிப்பிட்டது.
அந்தப் பணியாளருக்கு கிருமித்தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது குறித்து இன்று காலை தெரிவிக்கப்பட்டதாகவும் டிபிஎஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தக் கட்டடத்தின் 43வது மாடியில் பணிபுரியும் 300 பணியாளர்கள் இன்று மதியம் 12 மணிக்குள்ளாக வெளியேற்றப்பட்டு, வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி, அந்த அலுவலகம் மட்டுமின்றி கூடம், கழிவறைகள் போன்றவையும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அடுத்த வாரத்திலிருந்து அனைத்து பணியாளர்களுக்கும் முகக்கவசம், வெப்பமானி, கிருமிநாசினி, ‘வைட்டமின் சி’ ஆகியவை அடங்கிய தனிப்பட்ட தூய்மை, பாதுகாப்பு பராமரிப்புத் தொகுப்பு வழங்கப்படும் என்று டிபிஎஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கொரோனா கிருமித் தொற்று பற்றிய அண்மைய தகவல்களை மருத்த்துவ நிபுணர்கள் தங்களது பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள இணையம் வழியான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
MBFC முதலாவது கோபுரத்தில் ஒருவருக்கு கிருமித் தொற்று இருந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதையும் மின்னஞ்சல் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
#தமிழ்முரசு #கொரோனா #கொவிட்-19 #டிபிஎஸ் #300