'தனியார் மருந்தகங்களுக்கு ஒரு மில்லியன் முகக்கவசங்கள் வழங்கப்படும்'
தனியார் மருந்தகங்கள் முகக்கவசங்களின் தட்டுப்பாடு பற்றி அக்கறை தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு அரசாங்கம் ஒரு மில்லியன் முகக்கவசங்களை விநியோகிக்க உள்ளது.
இந்த விவரத்தை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மேலும் மூவருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50க்கு உயர்ந்திருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
வெளிநோயாளிகளை நிர்வகித்து, கிருமித் தொற்று கண்டோரைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முதல்நிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு திரு கான் நன்றி தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவர்கள் உட்பட தனியார் மருத்துவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா கிருமித்தொற்று சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து முகக்கவசங்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட்டார் அமைச்சர்.
“தனியார் மருத்துவர்களும் எங்களது அங்கம். அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் வழங்கப்படும்,” என்று உறுதி கூறினார் திரு கான்.
முகக்கவசம் அணிவதைவிட, கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கைகளைக் கழுவுவது முக்கியம் எனவும் நாம் அடிக்கடி தொடக்கூடிய கைபேசி போன்ற பொருட்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் இயக்குநர், இணைப் பேராசிரியர் கென்னத் மாக் குறிப்பிட்டார்.
#தமிழ்முரசு #முகக்கவசம் #கொரோனா