கிருமித்தொற்றைக் கண்டுபிடிக்க சீனாவில் புதிய வழிமுறைகள்
சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய புதிய நடைமுறைகள் நடப்புக்கு வந்ததையடுத்து, நேற்று (பிப்ரவரி 12) அங்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததாக இன்று சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் கிருமித் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 242 கூடி, நேற்றைய நிலவரப்படி அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,310 ஆனது. கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,000ஐத் தாண்டியுள்ளது.
முன்பு. சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட முடிவுகளிலிருந்து மட்டும்தான் சீனாவில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த உபகரணங்கள் போதிய அளவுக்கு இல்லாததால், மருத்துவர்கள் பார்த்து ஆய்வு செய்து, கிருமித் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தினால், தற்போது அத்தகையவர்களும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக உறுதி செய்யப்படுகின்றனர்.
இதன் மூலம் காலந்தாழ்த்தாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று ஹுபெய் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நேற்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,800ஐத் தாண்டியிருப்பதாகவும் அங்கு இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,360க்கு மேல் என்றும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் இன்று பிற்பகலில் தெரிவித்தது.
#தமிழ்முரசு #கொரோனா #சீனா #ஹுபெய்