நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் கிருமிநாசினியால் சாங்கி விமான நிலையம் சுத்திகரிப்பு
கொரோனா கிருமித்தொற்று பரவாமல் இருக்க சாங்கி விமான நிலையம் அதன் துப்புரவுப் பணிகளை மேம்படுத்தியுள்ளது.
ஆறு மாதங்களுக்குத் தாக்குபிடிக்கும் கிருமி நாசினியைக் கொண்டு விமான நிலையத்தில் உள்ள மின்தூக்கிப் பொத்தான்கள், தானியங்கி பதிவு இயந்திரம் ஆகியவை உட்பட மற்ற இடங்களும் சுத்தம் செய்யப்படுகின்றன.
இந்தக் கிருமி நாசினியை ஒருமுறை பயன்படுத்தினால், அது ஆறு மாதங்களுக்குத் தாக்குபிடிக்கும்.
இந்தக் கிருமி நாசினி சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காது என்றும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் ஜுவல் சாங்கி நிலையத்திலும் ஆங்காங்கே கூடுதலாக ஏறத்தாழ 1,000 கிருமி நாசினி போத்தல்கள் வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களும் முன்பைக்காட்டிலும் மேலும் அதிக முறை சுத்தம் செய்யப்படுகின்றன.
“உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்றுக்கான நிலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும், சாங்கி விமான நிலையம் தொடர்ந்து இயங்குவது மிகவும் முக்கியம்.
“இதை உறுதி செய்ய விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் ஆகியோரின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க நாங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்,” என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
#தமிழ்முரசு #சாங்கி விமான நிலையம் #கொரோனா #கிருமிநாசினி