அனுமதியின்றி சிங்கப்பூருக்கு வந்த 2 வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச்சீட்டு ரத்து
சீனாவிலிருந்து சிங்கப்பூர் திரும்ப அனுமதி வழங்கப்படாத நிலையிலும் சிங்கப்பூர் திரும்பிய சீனாவைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களின் வேலை அனுமதி சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவர்களை 24 மணி நேரத்துக்குள் சீனாவுக்குத் திருப்பி அனுப்ப அவர்களது முதலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இரு சீன ஊழியர்களும் சிங்கப்பூரில் இனி எப்போதும் வேலை செய்ய முடியாது.
அதுமட்டுமல்லாது, அவர்களது முதலாளிகளின் வெளிநாட்டு ஊழியர் வேலை அனுமதி சீட்டு சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 8ஆம் தேதி மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அந்தத் தேதிக்கு 14 நாட்களுக்கு முற்பட்ட காலகட்டத்தில் சீனாவுக்குச் சென்ற ஊழியர்கள் சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு முன்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இவ்விரு ஊழியர்களும் சிங்கப்பூருக்குத் திரும்ப அனுமதி கோரி அவர்களது முதலாளிகள் மனிதவள அமைச்சுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
ஆனால், அவர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கு அமைச்சு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக, அவர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் தொடங்கத் திட்டமிட்டிருந்த நேரத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பாகவே அமைச்சு தகவல் அளித்தும், அவ்விரு ஊழியர்களும் சிங்கப்பூருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 200 என்ற வீதத்தில் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்ப விரும்பும் ஊழியர்களுக்கு அமைச்சு அனுமதி வழங்கியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி. நேற்றுவரை சுமார் 600 ஊழியர்கள் சிங்கப்பூருக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சுகாதாரப் பராமரிப்புத் துறை, போக்குவரத்து, துப்புரவு துறை போன்றவற்றில் பணிபுரியும் அத்தகைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குத் திரும்பும் அவர்கள் 14 நாட்கள் கட்டாய விடுப்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாய விடுப்புக் காலம் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக நான்கு ஊழியர்கள் (வேலை அனுமதிச் சீட்டுடன் பணிபுரிவோர்) சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ஆறு முதலாளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தத் தடை விதிக்கப்பட்டதாகவும் கடந்த 9ஆம் தேதி அமைச்சு தெரிவித்தது.
#தமிழ்முரசு