பெய்ஜிங் திரும்புவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவு
சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குத் திரும்பும் அனைவரையும் 14 நாள் களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் கூறின.
விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்று திரும்புவோர் சுயமாகவோ அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலோ தனித்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் 143 பேர் உயிரிழந்தனர். இதையும் சேர்த்து, உலகம் முழுவதும் இதுவரை 1,523 பேரின் உயிரை அந்தக் கிருமி பறித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் 67,000ஐ நெருங்கிவிட்டது.
இந்நிலையில், உலகச் சுகாதார நிறுவனத்தின் 24 பேர் குழு, சீனா சென்றுள்ளது. வெளிநாட்டவர்கள் 12 பேரும் சீன நாட்டவர் 12 பேரும் அடங்கிய அந்தக் குழு, சீனாவில் கொரோனா கிருமி எப்படிப் பரவுகிறது, அதன் தீவிரத்தன்மை உள்ளிட்டவை குறித்து இன்று தனது விசாரணையைத் தொடங்க இருக்கிறது.