கொரோனோ: செய்திக்கொத்து 16.2.2020
டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் மேலும் 67 பேருக்குப் பாதிப்பு
யோக்கோஹாமா: ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலில் மேலும் 67 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் இருக்கும் அமெரிக்கர்களும் அவர்களது குடும்பத்தினரும் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்படுவர் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு விமானங்கள் மூலம் ஏறத்தாழ 380 பேர் ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி கூறியதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்தது.
டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் இன்றைக்குள் அமெரிக்கா சென்று அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று
பேங்காக்: தாய்லாந்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இதுவரை அந்நாட்டில் மொத்தம் 34 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை தாய்லாந்தின் சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட 35 வயது பெண் ஒரு மருத்துவ ஊழியர் என்றும் நோய்வாய்ப்பட்டிருந்த மற்றொருவரிடமிருந்து அவருக்கு அந்த கிருமி பரவியதாகவும் தாய்லாந்தின் நோய் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தாய்லாந்தில் இதுவரை 14 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் பாலத்தில் மோசமான போக்குவரத்து நெரிசல்
உட்லண்ட்ஸ் பாலத்தில் வழக்கமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் மோசமடைந்துள்ளது. கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் சோதனைச்சாவடியிலும் மலேசிய சோதனைச்சாவடியிலும் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படுவதே இதற்குக் காரணம்.
உட்லண்ட்ஸ் பாலத்தை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். உச்சவேளைகளின்போது, குறிப்பாக வெளிக்கிழமைகளிலும் வாரயிறுதிகளிலும் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர்கள் குறைகூறுகின்றனர்.
ஹவாயியிலிருந்து திரும்பிய ஜப்பானியருக்குப் பாதிப்பு
தோக்கியோ: ஹவாயி தீவிலிருந்து ஜப்பான் திரும்பிய ஜப்பானிய ஆடவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக ஹவாயி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த ஆடவர் ஹவாயி சென்றதற்கு முன்பே அவருக்கு ஜப்பானிலேயே அந்தக் கிருதித்தொற்று ஏற்பட்டதாக ஹவாயி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த அடவரும் அவரது மனைவியும் ஹவாயில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர் ஹவாயியில் இருந்தபோது அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று அறியப்படுகிறது. ஹவாயியின் ஒவாஹு நகரை அவர் அடைந்தபோது அவருக்கு சளி பிடித்துக்கொண்டதாகவும் ஆனால் காய்ச்சல் ஏற்படவில்லை என்றும் ஹவாயி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் ஜப்பான் திரும்பியதும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
நோட்டுகளைச் சுத்தம் செய்து தனியாக எடுத்துவைக்கும் சீன வங்கிகள்
பெய்ஜிங்: பயன்படுத்தப்பட்ட நோட்டுகளை சீனா சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துள்ளது. சீனாவில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பறித்துள்ள கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க சீனா எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
நோட்டுகளில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்க ஒருவகை கதிர்வீச்சு அல்லது உயர் வெப்பநிலையை சீன வங்கிகள் பயன்படுத்துகின்றன. அதன்பிறகு அந்த நோட்டுகள் ஏழு நாட்களிலிருந்து 14 நாட்களுக்கு பூட்டிவைக்கப்படுகின்றன.
‘சில நாடுகள் தேவையில்லாமல் பதற்றப்படுகின்றன’
பெர்லின்: கொரானா கிருமித்தொற்று சீனாவுக்குக் கடுமையான சவாலாக இருப்பதை சீன உயர் அதிகாரியான வாங் யீ ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் கிருமித்தொற்று குறித்து ஒருசில நாடுகள் தேவையில்லாமல் பதற்றப்படுவதாக அவர் சாடினார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அவர் செய்தியாளர்களிடம் அவர் இவற்றைத் தெரிவித்தார்.
“கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது திடீரென்று ஏற்பட்ட பிரச்சினை. சீனாவுக்கும் உலகிற்கும் இது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
“முழுமையான தடுப்பு, கட்டுப்பாடு முயற்சிகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள முயற்சிகளைப் போல மற்ற எந்த நாடும் செய்யவில்லை. ஆனால் சீனாவால் இதை செய்ய முடிந்துள்ளது,” என்று திரு வாங் யீ தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள மற்ற நாட்டுத் தலைவர்களும் சிரமப்படுவர் என்று திரு வாங் கூறினார். 2013ஆம் ஆண்டில் சீன அதிபராகப் பதவி ஏற்றதிலிருந்து அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்துள்ள மிகக் கடுமையான சவால்களில் இந்த கொரோனா கிருமித்தொற்றும் ஒன்று.