துப்புரவு, சுகாதார ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்கள்
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக சிங்கப்பூர் எடுத்துவரும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் துப்புரவு, சுகாதார ஊழியர்களுக்காக ஆயிரக்கணக்கான அன்பளிப்புப் பொட்டலங்கள் நேற்று தயார் செய்யப்பட்டன.
கட்டடக் கட்டுமானம், மரத் தொழில்துறை ஊழியர்களின் தொழிற்சங்கம் (பத்து), தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆகியவற்றின் இந்த முயற்சி அடுத்த சில வாரங்களில் ஏறத்தாழ 4,000 துப்புரவுப் பணியாளர்களுக்குப் பலனைத் தரும்.
சன்டெக் சிட்டி, மில்லேனியா வாக், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஸ்பிக் அண்ட் ஸ்பேன் துப்புரவு நிறுவனம் ஆகியவற்றின் துப்புரவுப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி போத்தல், தைலம், இரண்டு கிரீன் டீ பொட்டலங்கள் ஆகியவை அடங்கிய ஏறத்தாழ 300 அன்பளிப்புப் பொட்டலங்கள் நேற்று வழங்கப்பட்டன.
சில துப்புரவுப் பணியாளர்கள் கூடுதல் முயற்சி மேற்கொண்டு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதிலிருந்து கூடுதல் நேரம் வேலை செய்து வருவதாக பத்துவின் நிர்வாகச் செயலாளரும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினருமான சைனல் சப்பாரி தெரிவித்தார். துப்புரவுப் பணியாளர்கள் செய்யும் பணிகள் மிகவும் அவசியமானவை என்று என்டியுசி தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு இங் சீ மெங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். என்டியுசி, மக்கள் செயல் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 30 தொண்டூழியர்கள் சுகாதார ஊழியர்களுக்காக 400 அன்பளிப்புப் பொட்டலங்களைத் தயார் செய்துள்ளனர்.