கப்பல் பயணிகளில் 355 பேருக்கு தொற்று
ஜப்பான் கடலோரமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் உல்லாசக் கப்பலில் கொரோனா கிருமி தொற்றி யவர்களின் எண்ணிக்கை 355க்கு உயர்ந்துவிட்டது என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் நேற்று அறிவித்தார்.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் ஹாங்காங்கும் தங்கள் மக்களை அந்தக் கப்பலில் இருந்து மீட்டு வருவதற்காக விமானங்கள் அனுப்ப உள்ளன. கப்பலில் மொத்தம் 1,219 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 355 பேருக்கு கொரோனா கிருமி அறிகுறி தெரியவந்ததாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சர் கட்ஸ்சுனோபு கட்டோ நேற்று கூறினார்.
டைமண்ட் பிரின்சஸ் என்ற அக்கப்பல் 3,700 பேருக்கும் அதிக பயணிகளுடன் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஜப்பான் கடலோரப் பகுதிக்குச் சென்றது. கொரோனா தொற்று காரணமாக அது தனித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே, அந்தக் கப்பலில் இருக்கும் தன்னுடைய மக்களை மீட்கப்போவதாக ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்தது. அதேபோல கனடாவும் ஹாங்காங்கும் தாங்கள் விமானங்களை அனுப்பி தங்கள் பயணிகளை மீட்கப்போவதாக தெரிவித்து உள்ளன.