‘சீருடை ஊழியர்கள் 100% சுத்தம், சுகாதாரம்’
தாதியர், சுகாதார வழிகாட்டி நெறிமுறைகளை நூற்றுக்கு நூறு கடைப்பிடிக்கிறார்கள் என்றும் உடலை முழுவதுமாக மூடும் உடை, முகக்கவசங்கள், கையுறைகள், கண் பாதுகாப்புச் சாதனம் போன்ற தற்காப்புச் சாதனங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமைத் தாதியான டிராசி கரோல் அய்ரே தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித் தொற்றக்கூடிய ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் பணியில் இருப்பவர்கள் சொந்த தற்காப்புச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
தங்கள் சீருடைக்குப் பதிலாக அவர்கள் மருத்துவமனையில் சலவை செய்யப்பட்ட சீருடைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மருத்துவமனை சூழலும் சாதனங்களும் மிகவும் தூய்மையாக இருக்கின்றன. அவை நடைமுறைகளை முற்றிலும் பின்பற்றி அடிக்கடி மருந்து போட்டு சுத்தமாகக் கழுவப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தன்னுடைய முழு பெயரைக் குறிப்பிட விரும்பாத டாக்டர் லிம் என்பவர், வீட்டில் இருந்து தான் வேலை பார்க்கும் அரசாங்க மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் வழக்கமாக நூற்றுக்குநூறு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதாகக் கூறினார்.
கைபேசி, பேனா போன்றவற்றை ‘ஆல்கஹால்’ போட்டு கழுவிவிடுவார். கையைத் தேய்த்து சோப்புபோட்டு கழுவி சுத்தப்படுத்துவார். கொரோனா கிருமி தொற்றியதற்கு முன்பும் இவர் இத்தகைய துப்புரவு காரியங்களை மேற்கொள்வது வழக்கம். வேலை முடிந்து வீட்டுக்குப் போவதற்கு முன் குளித்து விட்டுச் செல்லவும் இவர் இப்போது திட்டமிடுகிறார்.
இதனிடையே, மற்றவர்களைவிட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அதிக சுகாதாரத் தரங்களைக் கடைப்பிடிப்பவர்கள் என்று சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கே. தனலட்சுமி தெரிவித்தார்.
அவர்கள் எப்போதுமே தங்கள் நோயாளிகளைப் பற்றியும் தங்கள் சொந்த குடும்பத்தினர் பற்றியும் அக்கறைக் கொண்டு இருப்பார்கள். ஆகையால் எப்போதுமே அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டார்கள்.
சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தொடர்பில் கடுமையான பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முறையான பராமரிப்பு இல்லை என்றால் தொடர் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் குமாரி தனலட்சுமி குறிப்பிட்டார்.
சீருடைகள் காரணமாக கிருமி பரவலாம் என்ற அச்சம் அறவே தேவையில்லை என்று அவர் உறுதி யாகக் கூறினார். பணி முடிந்து வீட்டுக்குப் போகும்போது சீருடைகளைக் களைந்துவிட்டு சாதாரண உடையில் செல்லும்படி சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு மருத்துவமனைகள் ஆலோசனை கூறி இருப்பதையும் அவர் சுட்டினார்.