ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்து அமெரிக்கர்கள் மீட்பு
ஜப்பான் கரையோரமாக தனிமைப்படுத்தப்பட்ட ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலிலிருந்து வெளியேறிய அமெரிக்கர்கள் தாயகத்துக்குப் புறப்பட்டனர்.
இதற்காக அமெரிக்க அரசாங்கம் இரண்டு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது.
தோக்கியோ ஹனேடா விமான நிலையத்திலிருந்து காலை முன்னேரத்தில் விமானங்கள் கிளம்பிச் சென்றதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சுமார் 400 அமெரிக்கர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து ஜப்பானின் யோகாஹமா துறைமுகத்தில் அந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது. சுமார் 3,700 பேர் கப்பலில் உள்ளனர்.
இதில் குறைந்தது நாற்பது அமெரிக்கர்களுக்கு கொரோனா கிருமித் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஹாங்காங்குக்கு இந்தக் கப்பல் வந்தபோது அதிலிருந்து இறங்கிய ஒருவருக்கு கிருமித் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ஜப்பானில் தனிமைப் படுத்தப்பட்டது. சீனாவுக்கு வெளியே இந்தக் கப்பலில்தான் கொரோனா கிருமியால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் 70லிருந்து 355க்கு அதிகரித்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய அதிகாரிகள் அறிவித்தனர்.
கிருமித் தொற்றிய அமெரிக்கர்களுக்கு ஜப்பானிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தேசிய ஒவ்வாமை, தொற்று நோய் நிலைய இயக்குநர் டாக்டர் அந்தோணி ஃபாசி சொன்னார்.
கப்பலில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்பது துல்லியமாகத் தெரியவில்லை.
ஆனால் அனைவரும் பின்னர் விமானப் படைத் தளங்களில் தனிமைப்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.