ஜப்பான் சொகுசுக் கப்பலில் 454 பயணிகளுக்கு கிருமித்தொற்று
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் கொவிட்-19 கிருமித் தொற்று பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேருடன் ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டது அக்கப்பல்.
இதற்கிடையே கப்பலிலிருந்து ஹாங்காங்கில் இறங்கிய பயணி ஒருவருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, அக்கப்பல் ஜப்பான் துறைமுகத்துக்கு அப்பால் கடந்த 3ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பானில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரண்டு தனி விமானங்கள் மூலம் 328 அமெரிக்கர்கள் நேற்று சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அவர்களில் கிருமித் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்ட 14 பேரும் அடங்குவர்.
கிருமித் தொற்றுக்குப் பயந்து சிலர் அமெரிக்கா திரும்ப மறுத்து கப்பலிலேயே இருந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
கப்பல் தனிமைப்படுத்தப்படுவதற்கான காலம் நாளையுடன் முடிவடைவதால், கிருமித் தொற்று இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைத் தொடர்ந்து தென்கொரியாவும் தனது குடிமக்களை அழைத்து வர விமானத்தை அனுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா, ஹாங்காங், இத்தாலி, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தனது நாட்டு மக்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்து வருகிறது.
#தமிழ்முரசு #கொரோனா #டைமண்ட் பிரின்சஸ் #சொகுசுக்கப்பல்