சிங்கப்பூரின் செயல்திறனை பாராட்டிய ஆஸ்திரேலிய செய்தியாளர்
கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக சிங்கப்பூர் எடுத்துள்ள நடவடிக்கைகளும் அதன் தொடர்பில் பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லும் அணுகுமுறையும் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள், பார்வையாளர்கள் இடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஆஸ்திரேலிய செய்தியாளர் ஸ்டீவன் ஸிட்ஸிச், “சிங்கப்பூரையும் அதன் அண்டை நாடுகளையும் ஒப்பிடும்போது, மற்ற தென்கிழக்காசிய நாடுகள் இந்தப் பிரச்சினையில் சிரமங்களைச் சந்தித்தபோதும், சிங்கப்பூரில் இந்தக் கிருமியைக் கட்டுப்படுத்த அறிவுபூர்வமான திட்டம் செயல்படுத்தப்பட்டது.
“இந்த தொற்றுநோய் சிங்கப்பூரைத் தாக்கியபோது, சிங்கப்பூரின் பொதுச்சேவை முழுமூச்சுடன் செயல்படத் தொடங்கியது. அது இன்னமும் அதே முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,” என்று ‘த ஆஸ்திரேலிய ஸ்ட்ராட்டெஜிக் பாலிசி இன்ஸ்டிடியூட்’ அமைப்பின் ‘த ஸ்ட்ராட்டெஜிஸ்ட்’ என்னும் இணையத்தளத்தில் திரு ஸ்டீவன் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர், சிங்கப்பூர் இந்தக் கிருமியைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி நிலையை சிங்கப்பூர் கையாளும் விதம் அதன் வலுவான செயலாற்றும் திறனை நமக்கு நினைவூட்டுவதாக உள்ளது என்று எழுதியுள்ளார். அத்துடன், இந்த தொற்று நோய் பரவல் பற்றிய கவலைகளைப் போக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலை வகித்துள்ளார் என்று திரு ஸ்டீவன் ஸிட்ஸிச் பாராட்டியுள்ளார்.