தென்கொரியாவில் வேகமாகப் பரவும் கொரோனா கிருமித்தொற்று; 204 பேர் பாதிப்பு
தென்கொரியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வரை அங்கு 31 பேர் மட்டுமே கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21) அந்த எண்ணிக்கை 204ஆக உயர்ந்தது.
அவர்களில் எழுவரைத் தவிர, மற்றவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தென்கொரியாவில் கிருமித்தொற்று ஒரு நெருக்கடிநிலையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் சுங் சை கியூன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தென்பகுதியில் உள்ள டேகு, சியோங்டோ ஆகிய இரு நகரங்களும் ‘சிறப்புப் பராமரிப்பு மண்டலங்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று மட்டும் மேலும் நூறு பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 86 பேர் டேகு நகரையும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஜியோங்சாங் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்; எழுவர் தலைநகர் சோலில் வசிப்பவர்கள்.
இதையடுத்து, சோல் நகரின் முக்கிய பகுதிகளில் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டேகு நகரில் வசிக்கும் 2.5 மில்லியன் மக்களும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
டேகுவில் அமைந்துள்ள ஷின்சியோன்ஜி தேவாலயத்துடன் தொடர்புடைய 128 பேரைக் கிருமி தொற்றியுள்ளது. இதையடுத்து, அந்த வழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவரையும் முழுமையாகச் சோதனை செய்ய அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தென்கொரிய ராணுவ வீரர்களில் சிலர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ராணுவக் குடியிருப்புகளைவிட்டு வெளியே செல்ல படையினர் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
#தென்கொரியா #கொரோனா