பங்ளாதேஷ் ஊழியரின் குடும்பத்துக்கு $10,000 நன்கொடை; அவசர, அன்றாட செலவுகளுக்காக...
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 39 வயது பங்ளாதேஷ் ஊழியரின் குடும்பத்தினரின் அன்றாடச் செலவுகளுக்காக இங்குள்ள வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) $10,000 நன்கொடையாக வழங்கியுளத்து. அந்தத் தொகை வங்கிக் கணக்கு பணப் பரிமாற்ற முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஊழியர் பணிபுரியும் யி-கி இன்னொவேஷன்ஸ் நிறுவனம், லியோ தங்குவிடுதியை நடத்தும் மினி-என்விரான்மென்ட் சர்வீசஸ் மற்றும் வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகியன இணைந்து அந்தத் தொகையை அனுப்பியுள்ளன.
காக்கி புக்கிட்டில் இருக்கும் தி லியோ தங்குவிடுதியில் தங்கியிருந்த அவர், சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 42வது நபர்.
இந்த ஊழியர்தான் அவரது குடும்பத்துக்காக சம்பாதிக்கும் ஒரே நபர் என்று குறிப்பிட்ட MWC, அவர் உடல்நலமின்றி இருக்கும் காலகட்டம் அந்தக் குடும்பத்துக்கு மிகவும் இக்கட்டானது என்று குறிப்பிட்டது.
அந்த ஊழியரின் வாரிசை அவரது முதலாளியின் மூலம் தொடர்புகொண்ட நிலையம், அவரது உடல் நலம் குறித்த தகவல்களையும் அவர்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் அந்த ஊழியரின் மருத்துவச் செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
மேலும் நான்கு பங்ளாதேஷ் ஊழியர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கி உதவ பலர் முன்வந்துள்ளதாகவும் நிலையம் குறிப்பிட்டது.
அந்த ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளும் ஆதரவும் அளிக்கப்படும் என்று நிலையம் உறுதிபடக் கூறியது.
“ஒருவேளை அவர்களது உடல்நலம் மிகவும் மோசமடைந்தால் அவர்களுக்காக பொது நிதி திரட்டுவது பற்றி முடிவு செய்யப்படும்,” என்றும் நிலையம் குறிப்பிட்டது.
பொதுவாக வெளிநாட்டு ஊழியர்களுக்காக நிதி வழங்க விரும்புவோர், காசோலையாகவோ அல்லது பணமாகவோ ‘வெளிநாட்டு ஊழியர்களுக்கான உதவி நிதி’க்கு வழங்கலாம். அவர்களது உதவி நிலையம் 579 சிராங்கூன் ரோடு, சிங்கப்பூர் 218193 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
#கொரோனா #சிங்கப்பூர் #MWC #The Leo Dormitry