கொவிட்-19: சீனாவில் புதிதாக 409 பேருக்கு தொற்று; 150 பேர் பலி
சீனாவில் புதிதாக 409 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இன்று (பிப்ரவரி 24) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் 31 மாநிலங்களில் புதிதாக 150 பேர் கிருமித்தொற்றால் மரணமடைந்துள்ளனர் என்றும் சீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த மரணங்களில் 149 ஹுபெய் மாநிலத்திலும் ஒன்று ஹைனான் மாநிலத்திலும் நிகழ்ந்தன.
நேற்றுவரை மொத்தம் 24,734 பேர் கிருமித்தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,846 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
சீனா முழுவதும் பரவியுள்ள கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த 99.5 பில்லியன் யுவான் (S$19.79 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சீனாவின் துணை நிதியமைச்சர் ஓவ் வென்ஹென் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வூஹானிலிருந்து, அந்த நகரவாசிகளல்லாதோர் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக வூஹானுக்குச் சென்றிருந்தவர்கள், கிருமித்தொற்று காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது அந்த நடைமுறை சற்று தளர்த்தப்பட்டுள்ளது. கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அவர்கள் கிருமிதொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை என்றால் அங்கிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, யுன்னான், குவாங்டோங், ஷான்ஸி, குவிஸோ ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று அபாய நிலையை சீனா குறைத்துள்ளது.
#வூஹான் #கொரோனா #கொவிட்-19 #சீனா