மத்திய கிழக்கு நாடுகளிலும் கிருமித்தொற்று
துபாய்: மத்திய கிழக்கு நாடுகளான குவைத், பஹ்ரேன், ஆப்கானிஸ்தான் ஆகியவை தங்களது முதலாவது கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரானுக்குச் சென்று திரும்பியவர்களிடமிருந்து தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குவைத்தில் மூன்று பேரும் பஹ்ரேனில் ஒருவரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவற்றின் அரசாங்க அமைப்புகள் தெரிவித்தன.
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாநிலமான ஹெராத்தில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஃபெரோஸ்டின் ஃபெரோஸ் நேற்று கூறினார்.
இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் நேற்று மேலும் நான்கு பேர் கிருமித்தொற்றால் மரணமடைந்தனர். அதையும் சேர்த்து ஈரானில் கிருமித்தொற்றால் மரணமுற்றோரின் எண்ணிக்கை 12க்கு உயர்ந்துள்ளது.