கொரோனா: செய்திக்கொத்து 28-2-2020
ஈரான்: பலி 26ஆக உயர்வு
டெஹ்ரான்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஈரானில் மாண்டவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துவிட்டது; கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 106 பேரைக் கிருமி தொற்றியதால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 245ஆக அதிகரித்திருக்கிறது.
முகக்கவசத்திற்காக மோதல்
யோக்கொஹாமா: முகக்கவசத்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஜப்பானின் யோக்கோஹாமாவில் அதற்காக சிலர் வீதியில் புரண்டு மல்லுக்கட்டிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
ஐரோப்பாவில் கொரோனா
ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் கொரோனா பரவிவிட்டது. இத்தாலி (528), ஜெர்மனி (21), பிரான்ஸ் (17), பிரிட்டன் (15), ஸ்பெயின் (12), சுவிட்சர்லாந்து (4), கிரீஸ் (3), குரோவேஷியா, ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா (தலா இருவர்), பெல்ஜியம், டென்மார்க், ஜார்ஜியா, நார்வே, வடக்கு மேசடோனியா, எஸ்டோனியா, ருமேனியா (தலா ஒருவர்) ஆகியவை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள். இதுவரை 16 பேர் உயிரிழந்துவிட்டனர்.
வூஹானில் இருந்து நாடு திரும்பிய 76 இந்தியர்கள்
புதுடெல்லி: மருந்துப் பொருட்களுடன் சீனாவின் ஹுபெய் மாநிலத்திற்குச் சென்ற இந்திய விமானப் படை விமானம், அம்மாநிலத்தின் தலைநகர் வூஹானிலிருந்து 76 இந்தியர்களுடனும் வெளிநாட்டவர்கள் 36 பேருடனும் நாடு திரும்பியது. அனைவரும் இரண்டு வாரகாலம் தனிமைப்படுத்தப்படுவர். இதனிடையே, ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் 16 இந்தியர்களைக் கிருமி தொற்றியிருக்கிறது.
தைவானில் விழிப்பு உச்சம்
தைவான்: கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் தைவானில் தொற்றுநோய்ப் பரவல் விழிப்புநிலை உச்சநிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கிருமித்தொற்றால் 32 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்; ஒருவர் மரணமடைந்தார்.