டிரம்ப்: அமெரிக்காவில் கிருமி பரவும் அபாயம் மிகவும் குறைவு
வாஷிங்டன்: ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா கிருமித்தொற்று பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் அந்த அபாயம் குறைவே என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியாகக் கூறியுள்ளார்.
“நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக கிருமி தொற்றுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்பே இருக்கிறது. ஒருவேளை, கிருமி தொற்றும் விகிதம் பெரியளவில் இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் மிக மிக ஆயத்தமாக இருக்கிறோம்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 81,000க்கும் மேற்பட்டோரைக் கிருமி தொற்றியுள்ள நிலையில், அமெரிக்காவில் 15 பேரை அது தொற்றியிருக்கிறது.
அதே நேரத்தில், சீனாவின் வூஹான் நகரில் மூவர், ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் 42 பேர் என மேலும் 45 அமெரிக்கர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறிகுறி இருப்போரைத் தனிமைப்படுத்துதல், சீனாவில் இருந்து வருவோருக்கு நுழைவு அனுமதி தற்காலிகமாக மறுப்பு உட்பட தமது அரசாங்கம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிபர் டிரம்ப் தற்காத்துப் பேசினார்.
கிருமித்தொற்று வேகமாகப் பரவி வரும் தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கும் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்பில்லாத ஒருவரை கிருமி தொற்றியதால் அச்சம்
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட எவருடனும் தொடர்பில்லாத, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ள நிலையில், கிருமிப் பரவல் இன்னும் இருப்பதாக அமெரிக்கர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனிடையே, கிருமித்தொற்றால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என்றபோதும் சான் ஃபிரான்சிஸ்கோவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.