சவூதி அரேபியாவின் தற்காலிகத் தடையால் விமான நிலையங்களில் தவிக்கும் உம்ரா யாத்ரிகர்கள்
வெளிநாட்டுப் பயணிகளைத் தற்காலிகமாகத் தடை செய்ய சவூதி அரேபியா முடிவு செய்துள்ளதையடுத்து உம்ரா புனிதப் பயணம் செல்வதற்காகக் கிளம்பிய பல நாட்டு மக்கள் விமான நிலையங்களில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் சவூதி அரேபியாவுக்குச் செல்லும், அங்கிருந்து வெளியேறும் விமானங்களுக்கு அந்நாடு தற்காலிகத் தடைவிதித்துள்ளது.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) சுமார் 3,000 இந்திய யாத்ரிகர்கள் சென்ற பல விமானங்கள் தரையிறங்க சவூதி அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. கொல்கத்தாவிலிருந்து கிளம்பிய எட்டிஹாட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து திருப்பிவிடப்பட்டது.
இதற்கிடையே, 128 யாத்ரிகர்கள் இந்தியாவின் லக்னோவிலுள்ள அனைத்துலக விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் நேற்று (பிப்ரவரி 27) காலை கூடினர்.
நேற்று விமானம் மூலம் அவர்களில் பலர் சவூதிக்கு கிளம்ப இருந்தனர்.
ஆனால், சவூதி அரசாங்கம் புனிதப் பயணிகள் உட்பட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல, கிட்டத்தட்ட 800 மலேசியர்கள் ஜெத்தா, மதினா ஆகிய இடங்களுக்குச் சென்ற பிறகு சவூதி அரேபியாவின் அறிவிப்பு வெளியானதையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.
சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சவூதி அரேபியாவுக்குச் செல்லும் மலேசிய யாத்ரிகர்கள் தங்கள் பயணங்களைத் தள்ளிவைக்குமாறு மலேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#உம்ரா #சவூதிதடை #கொரோனா